பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. முதல்முறையாக வாட்ஸ்அப் மூலம் முடிவுகளை அறிந்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 2 முதல் மார்ச் 26-ம் தேதி வரை நடைபெற்றது. 3,412 மையங்களில் 8.27 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.
150-க்கும் மேற்பட்ட மையங்களில் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் கடந்த ஏப்.6 முதல் ஏப்.20-ம் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து, தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை தேர்வுத் துறை தீவிரமாக மேற்கொண்டது.
இதற்கிடையே, தமிழகத்தில் புதிய அரசு அமைவதில் தாமதம் ஏற்படுவதாலும், தேர்வு முடிவுகளுக்கு ஒப்புதல் பெறாததாலும், ஏற்கெனவே அறிவித்தபடி மே 8-ம் தேதி தேர்வு முடிவு வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்தது.
நிர்வாக காரணங்களால் முடிவுகளை வெளியிடும் தேதி தள்ளிப்போகலாம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி இன்று வெளியிடப்பட உள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் க.சசிகலா வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனக் கூட்டரங்கில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 8-ம் தேதி (இன்று) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.
மாணவர்கள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in மற்றும் results.digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் தங்களது பிறந்த தேதி, பதிவு எண் ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறியலாம்.
பள்ளி மாணவர்கள் உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்ட செல்போன் எண் மற்றும் தனித் தேர்வர்கள் இணையவழியில் விண்ணப்பித்தபோது வழங்கிய செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
மேலும், இந்த ஆண்டு முதல்முறையாக தமிழ்நாடு மின்ஆளுமை முகமை மூலம் வாட்ஸ்அப் செயலியில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.




