Close
ஜூலை 7, 2026 12:49 காலை

பச்சை குத்துவதன் மறைமுக ஆபத்து: உடலுக்குள் வாழ்நாள் முழுவதும் நடக்கும் மௌனப் போராட்டம்!

இன்றைய இளைஞர்கள் மத்தியில் டாட்டூ எனப்படும் பச்சை குத்திக்கொள்வது ஒரு முக்கிய நாகரீக அடையாளமாக மாறியுள்ளது. சுய வெளிப்பாட்டின் ஒரு வடிவமாக இது பார்க்கப்பட்டாலும், டாட்டூ மை நமது உடலுக்குள் ஏற்படுத்தும் நீண்ட கால பாதிப்புகள் குறித்து விஞ்ஞானிகள் தற்போது தீவிர எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

பச்சை குத்தும்போது, நமது உடலில் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் ஒரு மௌனப் போராட்டம் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்குள் தொடங்குகிறது என்று புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

டாட்டூ மை தோலின் நடுத்தர அடுக்கிற்குள் செலுத்தப்படும் போது, நமது உடல் அதனை ஒரு ‘அன்னிய ஆபத்தாக’ அடையாளம் காண்கிறது. உடனே, அந்த மையை அழிப்பதற்காக வெள்ளை இரத்த அணுக்கள் அடங்கிய ஒரு பெரும் படையே அந்த இடத்திற்கு அனுப்பப்படுகிறது.

ஆனால், டாட்டூ மையின் துகள்கள் வெள்ளை இரத்த அணுக்களால் அழிக்க முடியாத அளவிற்குப் பெரியதாக இருப்பதால், அவற்றால் மையை அகற்ற முடிவதில்லை. இதன் விளைவாக, அந்த மை துகள்கள் தோலிலேயே தங்கிவிடுகின்றன. இதுவே டாட்டூ நிரந்தரமாக மாறுவதற்குக் காரணம். இருப்பினும், நோய் எதிர்ப்பு மண்டலத்தின் போராட்டம் இத்துடன் முடிந்துவிடுவதில்லை.

ஆய்வுகளின்படி, தோலில் இருக்கும் டாட்டூ மையின் மிக நுண்ணிய துகள்கள் தொடர்ந்து உடைந்து, உடல் முழுவதும் பயணம் செய்கின்றன. இறுதியில், அவை நமது உடலின் முக்கிய வடிகட்டியான நிணநீர் முடிச்சுகளில் போய் குவிகின்றன.

நிணநீர் முடிச்சுகள் என்பவை நோய்த்தொற்றுகளுக்கு எதிராகப் போராடும் உடலின் முதன்மை பாதுகாப்பு அரணாகும். அங்கேயே இந்த அன்னிய மை துகள்கள் தேங்குவது, உடலின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்புத் திறனைப் பாதிக்கலாம்

சமீபத்தில், அமெரிக்க ராப்பர் எம்.ஜி.கே தனது உடல் முழுவதும் ஒரே நேரத்தில் அதிகளவில் கறுப்பு நிற டாட்டூ குத்தியதால், அவரது தோள்பட்டை மற்றும் அக்குள்களில் உள்ள நிணநீர் முடிச்சுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, அவர் மஞ்சள் காமாலை போன்ற பாதிப்புக்குள்ளாகி தீவிரமாய் நோய்வாய்ப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மையில் இருக்கும் ஆபத்தான வேதிப்பொருட்கள்

டாட்டூ தயாரிப்புத் துறை உலகளவில் இன்னும் முழுமையாக முறைப்படுத்தப்படவில்லை என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். டாட்டூக்களுக்குப் பயன்படுத்தப்படும் பல வண்ண மைகள், உண்மையில் வாகனங்களின் பெயிண்ட்டுகள், பிளாஸ்டிக் மற்றும் பிரிண்டர் டோனர்களுக்காக உருவாக்கப்பட்டவை ஆகும். மேலும், இவற்றில் நிக்கல், குரோமியம் மற்றும் ஈயம் போன்ற உலோகங்களின் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

வண்ண மைகளின் ஆபத்து: சிவப்பு, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு போன்ற வண்ண மைகள் நாள்பட்ட அழற்சி மற்றும் கடுமையான ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. ஒரு குறிப்பிட்ட வழக்கில், சிவப்பு மையினால் ஏற்பட்ட தீவிர ஒவ்வாமையால் ஒரு நபர் தனது வியர்வை சுரக்கும் திறனையும், உடல் முடிகளையும் முற்றிலும் இழந்த சோகமும் நடந்துள்ளது.

புற்றுநோய் அபாயம்: டாட்டூ குத்தப்பட்ட தோலில் சூரிய ஒளி படும்போதோ அல்லது அதனை லேசர் மூலம் அழிக்க முயலும்போதோ, அந்த மைகள் சிதைந்து மரபணுவை பாதிக்கும் ‘அரோமேடிக் அமைன்கள்’ என்ற வேதிப்பொருளாக மாறுகின்றன. கறுப்பு மைகளில் வாகனப் புகையில் இருக்கும் ஹைட்ரோகார்பன்கள் உள்ளன. டாட்டூக்களுக்கும் புற்றுநோய்க்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக இன்னும் உறுதியான ஆதாரம் இல்லை என்றாலும், டாட்டூ குத்தியவர்களுக்குத் தோல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகச் சில புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

மருத்துவர்களின் அறிவுரை

பச்சை குத்திக் கொள்ள விரும்பும் எவரும், டாட்டூ கலைஞரிடம் சுகாதாரம் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் மையின் உட்பொருட்கள் குறித்துக் கேட்டறிய வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
குறிப்பாக, சுய நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ளவர்கள் அல்லது பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள், டாட்டூ குத்திக்கொள்வதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top