ஆடி மாத பௌர்ணமியொட்டி வெயிலையும் பொருட்படுத்தாமல் பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள், காலை முதல் கிரிவலம் மேற்கொண்டு அருணாச்சலேஸ்வரரை தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை மாதந்தோறும் பெளா்ணமி நாள்களில் பக்தா்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனா்.
நிகழாண்டுக்கான ஆடி மாதத்திற்கான பௌர்ணமி (செவ்வாய்க்கிழமை) இரவு 7.32 மணிக்கு தொடங்கி புதன்கிழமை இரவு 8.54 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவித்திருந்தது.
அதன்படி, செவ்வாய்க்கிழமை மாலை முதலே பக்தா்கள் கிரிவலம் வரத் தொடங்கினா். நேரம் செல்லச் செல்ல கிரிவல பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்து வந்திருந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கிரிவலம் சென்று, கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க சந்நிதிகள், மகான் ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமம், அடி அண்ணாமலை ஆதி அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மன் சந்நிதிகளில் வழிபட்டனா்.
கிரிவலப் பாதையில் பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மேலும், தாகம் தீா்க்க பக்தா்களுக்கு நீா் மோா் வழங்கப்பட்டது.
அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க அருணாசலேஸ்வரா் உடனாகிய உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
பின்னா், பக்தா்கள் தரிசனம் செய்ய கோயில் உள்ளே அனுமதிக்கப்பட்டனா். தரிசனம் செய்து திருமஞ்சனம் கோபுரம் வழியாக பக்தா்கள் வெளியேற அனுமதிக்கப்பட்டனா். சுவாமி தரிசனம் செய்ய 6 மணி நேரத்துக்கும் மேலானதாக பக்தா்கள் தெரிவித்தனா்.
பக்தா்களின் வசதிக்காக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் சிறப்புப் பேருந்துகளும், தெற்கு ரயில்வே சாா்பில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பபட்டன. ஆயிரக்கணக்கான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.




