Close
ஆகஸ்ட் 13, 2026 4:10 மணி

தானே பால்கும் பகுதியில் அமேசான் டேட்டா சென்டருக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பெருநகரப் பகுதிக்குட்பட்ட தானே நகரின் பால்கும் பகுதியில், அமேசான் வெப் சர்வீசஸ் நிறுவனம் அமைத்து வரும் பிரம்மாண்ட டேட்டா சென்டர் திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அமேசான் டேட்டா சர்வீசஸ் இந்தியா நிறுவனம் 53 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் ரூ. 47,000 கோடி முதலீட்டில் இந்த மையத்தை நிறுவி வருகிறது. இது மும்பை பெருநகரப் பகுதியிலேயே மிகப்பெரிய டேட்டா சென்டர்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தால் சுற்றுச்சூழல், மின் விநியோகம் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி, “வேக் அப் தானேக்கர்”என்ற அமைப்பின் கீழ் ஒன்றுதிரண்டுள்ள பொதுமக்கள் தொடர் எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

கடந்த ஜூலை 18 அன்று மனிதச்சங்கிலிப் போராட்டம் நடத்திய பொதுமக்கள், அமேசான் அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், தங்களின் தொழில்நுட்ப மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த கேள்விகளுக்குத் திருப்திகரமான பதில்கள் கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

பொதுமக்களின் முக்கியக் கவலைகள்

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், தாங்கள் டேட்டா சென்டர் தொழில்நுட்பத்திற்கு எதிரானவர்கள் அல்ல என்றும், ஆனால் அது மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதியின் நடுவே அமைக்கப்படுவதே ஆபத்தானது என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இத்திட்டப் பகுதியைச் சுற்றி உயர்மட்டக் கட்டிடங்கள், மூன்று கிராமங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன. இயந்திரங்களைக் குளிர்விக்க சுமார் 80,000 ஏசிகள் வரை பயன்படுத்தப்படும் என்பதால், கோடை காலத்தில் பால்கும், தோக்கலி மற்றும் மாஜிவாடா போன்ற சுற்றியுள்ள பகுதிகளில் வெப்பநிலை பெருமளவு அதிகரிக்கும் என மக்கள் அஞ்சுகின்றனர்.

திட்ட வளாகத்தில் அவசர கால மின் தேவைக்காகச் சுமார் 190 டீசல் ஜெனரேட்டர்கள் நிறுவப்படவுள்ளதால், சத்த மாசுபாடும் அதிக அளவிலான புகை உமிழ்வும் ஏற்படும் என்ற அச்சம் மேலோங்கியுள்ளது.

இந்த மையம் தடையில்லா 420 மெகாவாட் மின்சாரத்தைப் பயன்படுத்தவுள்ளது. ஏற்கனவே அப்பகுதியில் மின்வெட்டுப் பிரச்சினைகள் உள்ள நிலையில், இந்த மையம் உள்ளூர் மின் கட்டமைப்பைப் பெருமளவில் பாதிக்கும் என்று அப்பகுதி வாசசிகள் தெரிவிக்கின்றனர்.

பொதுமக்களின் அச்சங்களுக்கு அமேசான் நிறுவனம் விரிவான விளக்கங்களை அளித்துள்ளது. தானே மையத்தின் குளிர்விப்புத் தேவைக்காக உள்ளூர் குடிநீரோ அல்லது சமூகத் தண்ணீரோ பயன்படுத்தப்படாது என்றும், காற்றில் இயங்கும் ஏர்-கூல்ட் சில்லர்கள் மற்றும் மூடிய சுழற்சி முறை மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

உள்ளூர் மக்களுக்கு வழங்கப்படும் மின்சாரத்திலிருந்து மின்சாரம் பெறப்படாது. இதற்கென பிரத்யேகமாக அமைக்கப்படும் அதி-உயர் அழுத்த சப்-ஸ்டேஷன் மூலம் நேரடியாக மின்சாரம் பெறப்படும் என்பதால் பொதுமக்களின் மின் விநியோகம் பாதிக்கப்படாது எனக் கூறியுள்ளது.

2000-ஆம் ஆண்டின் ஒலி மாசுபாடு விதிகளின்படி, சத்தத்தைக் குறைக்கும் சிறப்பு கட்டுமானப் பொருட்கள், ஒலி உறிஞ்சும் உறைப் பகுதிகள் மற்றும் மஃப்ளர்கள் பயன்படுத்தப்படும் என அமேசான் தெரிவித்துள்ளது.

திட்டத்திற்கான அரசாங்க அனுமதிகள் மற்றும் கொள்கை கட்டமைப்பு குறித்து பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொள்ளாமல் குடியிருப்புப் பகுதியில் இதுபோன்ற பிரம்மாண்ட மையத்திற்கு அனுமதி அளித்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

அரசு மற்றும் உள்ளூர் அமைப்புகளின் இந்த நடவடிக்கை தங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ள பொதுமக்கள், இத்திட்டத்தின் இருப்பிடத்தை மாற்ற வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top