ஏ.ஐ மூலம் 1980-களின் விண்டேஜ் ரெட்ரோ தோற்றத்திற்கு நமது புகைப்படங்களை மாற்றி அமைக்கும் போக்கு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பழங்கால சிகை அலங்காரங்கள், ஆடைகள் மற்றும் ஃபிலிம் போன்ற டெக்ஸ்சர்கள் மூலம் 80-களின் ரெட்ரோ பாணியில் நம்மைப் பார்த்து நாமே ரசிப்பதும், அதைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்து ‘லைக்குகளைக்’ குவிப்பதும் வேடிக்கையாக இருந்தாலும், இதற்குப் பின்னால் உள்ள ஆபத்துகளை நாம் உணர வேண்டும்.
ஒரு தனிப்பட்ட புகைப்படத்தை, குறிப்பாக உங்கள் முகம் தெளிவாகத் தெரியும் படத்தை ஏ.ஐ உரையாடல் ஆப்களுக்குப் (ஏ.ஐ சாட்பாட்) பதிவேற்றுவது எந்த அளவுக்குப் பாதுகாப்பானது? இந்த வினாவுக்கு இணையப் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை வல்லுநர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
வைரல் ட்ரெண்டுகளுக்குப் பின்னால் இருக்கும் ஆபத்துகள்
முன்னதாக சாட்ஜிபிடி மூலம் ஜிப்லி பாணி மற்றும் கேலிச்சித்திரப் படங்களை உருவாக்கும் ட்ரெண்ட் பரவியபோதும் இதே போன்ற கவலைகள் எழுப்பப்பட்டன.
இணையப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் மூர் கூறுகையில்: மக்கள் இதுபோன்ற போக்கைப் பின்பற்றுவதில் காட்டும் அவசரத்தை, அதன் பின்னணியில் என்ன நடக்கிறது என்று யோசிப்பதில் காட்டுவதில்லை. சாட்ஜிபிடி போன்ற ஒரு சாட்பாட்டிற்கு நீங்கள் புகைப்படங்களையும் தனிப்பட்ட விவரங்களையும் பதிவேற்றும்போது, அந்தத் தளம் தகவல்களைச் சேகரித்து பகுப்பாய்வு செய்கிறது. இந்தத் தரவுகள் சேமிக்கப்பட்டு, எதிர்காலத்தில் தெளிவற்ற நீண்டகாலப் பயன்பாடுகளுக்காக ஏ.ஐ மாடல்களுக்குப் பயிற்சி அளிக்கப் பயன்படுத்தப்படுகின்றன என்று கூறியுள்ளார்
பயனர்கள் தங்களுக்கு மிகவும் துல்லியமான ஏ.ஐ படம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, தங்களைப் பற்றிய கூடுதல் விவரங்களைத் தாங்களாகவே முன்வந்து உள்ளீடு செய்கின்றனர்.
சைடிடெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மாட் கான்லன் இது குறித்து எச்சரிக்கும்போது, ஏ.ஐ தரும் வெளியீடு துல்லியமாக இல்லாவிட்டால், பயனர்கள் மேலும் சூழலைச் சேர்த்து, மிகவும் தனிப்பட்ட தரவுகளைக் கொண்டு அந்த ஏ.ஐ அமைப்பிற்குத் திறம்படப் பயிற்சி அளிக்கிறார்கள். இது தரவு தனியுரிமை குறித்த கடுமையான கவலைகளை எழுப்புவதோடு, எதிர்காலத்தில் அடையாளத் திருட்டு ஆபத்தையும் அதிகரிக்கக்கூடும். ஒருமுறை தரவு பதிவேற்றப்பட்ட பின், அதை முழுமையாக நீக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ முடியும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று கூறினார்
தொடர்ச்சியாக வரும் இதுபோன்ற வைரல் ட்ரெண்டுகள், ஏ.ஐ கருவிகளில் தனிப்பட்ட தகவல்களைப் பதிவேற்றுவதை ஒரு இயல்பான செயலாக உணரச் செய்துவிடுகின்றன. தரவு எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பதைக் யோசிக்காமல், புகைப்படங்கள் மற்றும் விவரங்களை ஏ.ஐ கருவிகளுடன் பகிர்வது வாடிக்கையாகி விடுகிறது. ஏ.ஐ உருவாக்கிய படத்தை இன்ஸ்டாகிராம், எக்ஸ் அல்லது ஃபேஸ்புக்கில் பகிரும்போது, அந்தப் படம் அதன் அசல் சூழலைத் தாண்டி நகலெடுக்கப்படவோ அல்லது தவறாகப் பயன்படுத்தப்படவோ வாய்ப்புள்ளது.
இது பாதுகாப்பானதா? – சாட்ஜிபிடி அளிக்கும் பதில்
1980-களின் பாணியிலான படத்தை உருவாக்கப் புகைப்படத்தைப் பதிவேற்றுவது பாதுகாப்பானதா என்று சாட்ஜிபிடி-யிடம் கேட்டபோது, அது வழங்கிய பாதுகாப்பு ஆலோசனைகள் பின்வருமாறு: பின்னணியில் முகவரிகள், அடையாள அட்டைகள், ஆவணங்கள் அல்லது குழந்தைகளின் படங்கள் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். மற்றவர்கள் இருக்கும் புகைப்படங்களைப் பதிவேற்றுவதைத் தவிர்க்கவும். புகைப்படம் மிகவும் தனிப்பட்டதாக இருந்தால், ஆஃப்லைன் படத் திருத்தும் கருவிகளைப் பயன்படுத்தலாம். முழு புகைப்படத்திற்குப் பதிலாக, முகத்தை மட்டும் வெட்டிப் பயன்படுத்தலாம்.
ஒரு வேடிக்கையான ஏ.ஐ ட்ரெண்ட் என்பது, புகைப்படத்தைப் பதிவேற்றுவதால் ஏற்படும் தனியுரிமைப் பாதிப்புகளைச் சரிசெய்துவிடாது. 1980களின் ரெட்ரோ தோற்றத்தைப் பெற விரும்பினால், முடிந்தவரை குறைவான தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்தும் படங்களைப் பயன்படுத்துவதும், பாதுகாப்பான வழிமுறைகளைப் பின்பற்றுவதும் மிகவும் அவசியமாகும்.




