புதுக்கோட்டைஎம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கேபி நிறுவனம் இணைந்து நடத்திய தென்னை ரூகோஸ் வெள்ளை ஈக்கள் தாக்குதலை கட்டுப்படுத்துதல் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் புதுக்கோட்டை எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார் தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில், எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் விவசாயத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. குறிப்பாக பயிர்களில் ஏற்படும் பல்வேறு பூச்சி, நோய் மற்றும் நுண்ணூட்ட சத்து குறைபாடுகளை கட்டுப்படுத்துவதற்காக பயிற்சி பெற்ற பயிர் மருத்துவர்களை கொண்டு பயிர் மருத்துவ முகாம்களை நடத்தி வருகின்றது. தென்னையில் ரூகோஸ் சுருள் ஈ தாக்குதல் மிக முக்கியமான பிரச்சனையாக உள்ளது. இது ஒரு புலம் பெயர் பூச்சியாகும்.
முறையான பயிர் பாதுகாப்பு முறைகளை கையாளுவதன் மூலம் இந்த ஈ தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம். தென்னை இலையின் பின்புறத்தில் வறட்சி காலத்தில் வெள்ளை ஈக்கள் கூட்டம் கூட்டமாக காணப்படும். இவை இலைகளில் சாறை உறிஞ்சி உயிர்வாழும்.
இதன் தாக்குதலால் இலைகள் பச்சையத்தை இழந்து மஞ்சள் நிறமடையும். இலைகள் உணவு தயாரிக்கும் திறனை இழந்து 40 முதல் 50 சதவிகிதம் வரை மகசூல் இழப்பு ஏற்படும். இதனைத் தடுக்க ஒரு ஏக்கருக்கு 10 – 12 எண்கள் 5 X 2 அடி என்ற அளவில் 10 அடி உயரத்தில் மஞ்சள் வண்ண ஒட்டுப் பொறி அமைக்க வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு 10 கிரைசோபெர்லா இரைவிழுங்கி முட்டை அட்டைகளை கட்ட வேண்டும். (அல்லது) 500 இளம் குஞ்சுகளை விடுவிக்க வேண்டும். வேப்ப எண்ணெய் 10 மிலி + பூண்டுச்சாறு 5 மிலி + ஒட்டுப்பசை 1 மிலி / லிட் என்ற அளவில் இலைகளின் அடிப்புறம் நனையும்படி தெளிக்க வேண்டும். இந்த சரித்திரங்கில் விவசாயிகள் கற்றுக் கொண்ட விவரங்களை தாங்கள் கடைபிடிப்பதோடு மற்ற விவசாயிகளுக்கும் எடுத்துக் கூற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
கருத்தரங்கில் எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி ப.மணிகண்டன், பயிர் மருத்துவர் பி.செந்தில்குமார் ஆகியோர் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதலை எவ்வாறு கண்டறிவது மற்றும் கட்டுப்படுத்துவது குறித்து விரிவாக விளக்கி பேசினார். மேலும் விவசாயிகளின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் எம்.வீரமுத்து, முன்னோடி விவசாயிகள் ச.வே.காமராசு, கே.பரமசிவம், முதல் மு. தங்கராஜ், மா.திருப்பதி, எம் முத்துலட்சுமி, மற்றும் கனிஷ்கா ஆர்கானிக் இடுப்பொருட்கள் நிறுவனர், கே.சிவகுமார் ஆகியோர் விவசாயிகளின் பல்வேறு பிரச்சினைகளை எடுத்துக் கூறினார்கள். நிகழ்வின் புதுக்கோட்டையின் பல்வேறு பகுதியிலிருந்து 65 விவசாயிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன கள அலுவலர் டி.விமலா அனைவரையும் வரவேற்றார். தொழில்நுட்ப அலுவலர் ஆர்.வினோத்கண்ணா நன்றி கூறினார்.




