Close
அக்டோபர் 5, 2024 7:04 மணி

கந்தர்வகோட்டையில் குழந்தைகளுக்கான வாசிப்பு இயக்கம்

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டையில் நடைபெற்ற வாசிப்பு இயக்கம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் கிளை நூலகம் இணைந்து குழந்தைகளுக்கான வாசிப்பு இயக்கம் கந்தர்வகோட்டையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் கிளை நூலகம் சார்பில் குழந்தைகளுக்கான வாசிப்பு இயக்கம் கந்தர்வகோட்டை கிளை நூலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை வட்டாரச் செயலாளர் ரஹ்மத்துல்லா தலைமை வகித்தார். இதில் அனைவரையும் கிளை நூலகர் மாலினி வரவேற்றார். குழந்தைகளை நூல்களின் வழியில் கொண்டாடுவோம் எனும் தலைப்பில் ஆசிரியர் பயிற்றுநர் பாரதிதாசன் பேசினார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக  தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்ட தலைவர் முத்துக்குமார்  கலந்து கொண்டு, குழந்தைகளுக்கான வாசிப்பு இயக்கத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:

நடராஜன் எழுதிய ஆயிஷா எனும் நூலில் அறிவியல் ஆர்வமிக்க குழந்தையாக விளங்கும் ஆயிஷா எனும் சிறிய வயது மாணவி மாவட்ட நூலகத்திற்கு சென்று காந்தங்கள் பற்றிய பெரிய பெரிய புத்தகங்களைப் படித்து அறிவியல் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார். அவரைப் போல  குழந்தைகளும் வாசிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்.

இவ்வாசிப்பு முகாமில் பங்குபெற்று குழந்தைகளுக்கான கணிதம், அறிவியல், வரலாறு, சிறுகதைகள், பாடல்கள், உள்ளிட்ட நூல்களை நாமும் படித்து இந்தியாவின் சிறந்த குடிமக்களாக வளர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மேலும், கோடை விடுமுறை காலங்களில் இதுபோன்று தினமும் நூலகத்திற்கு வந்து நமக்குப் பிடித்த புத்தகங்களை படித்து அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

இதில் குழந்தைகள் சின்னஞ் சிறுவர்கள் சிந்திக்க சில கதைகள், அறிவூட்டும் நீதிக் கதைகள், சின்னச் சின்ன அறிவியல் மேஜிக், தெனாலிராமன் கதைகள், சிரிக்க சிந்திக்க நூறு குட்டிக் கதைகள், கலைவாணர் கதை, சிறுவர் கதைக் களஞ்சியம், குழந்தைகளைப் பாடுவோம் வாங்க, நேதாஜியின் புது வழி, யூசுஃப் மலாலா, விஞ்ஞான தேடல்கள், அறிவியல் விருந்து, சூரிய மண்டலம், உலக விஞ்ஞானிகள், அறிவியல் அறிஞர்கள் ஐவர், அறிவியல் உலா உள்ளிட்ட நூல்களை குழந்தைகள் வாசித்தனர்.

மேலும் நூலகர் வனிதா பேசும்போது கந்தர்வகோட்டை கிளை நூலகத்திலுள்ள 37,478 நூல்களில் குழந்தைகளுக்கான 1000 க்கும் மேற்பட்ட தமிழ் நூல்களும், 1000 -க்கும் அதிகமான ஆங்கில நூல்களும் உள்ளதாகவும் இவற்றை குழந்தைகள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
இதில் அறிவியல் இயக்க கிளைப் பொறுப்பாளர்கள் குணசுந்தரி, கயல்விழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.நிறைவாக நூலக வாசகர் இலக்கியா  நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top