கேரளா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் முடித்துத் திரும்பும் வழியில் பம்பா சாலையில் மரம் வேரோடு சாய்ந்ததால், ஜனாதிபதியின் புறப்பாடு சில நிமிடங்கள் தாமதமானது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 4 நாள் பயணமாக கேரளாவுக்கு வந்திருந்தார். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லுதல், ராஜ்பவனில் முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றல், வர்க்கலா சிவகிரி மடத்தில் நடக்கும் ஸ்ரீ நாராயணகுரு மகா சமாதி நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விதமாக அவரது பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று (அக். 22, 2025) அவர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்தார்.பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு சுவாமி ஐயப்பன் சாலை மற்றும் பாரம்பரிய மலையேற்றப் பாதை வழியாக சிறப்பு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். பகல் 11.55 மணி முதல் 12.25 மணி வரை ஜனாதிபதி சாமி தரிசனம் செய்தார்.
கோவிலுக்கு வருகை தந்த ஜனாதிபதிக்கு, கோவில் தந்திரி தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
சபரிமலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு, தேவசம் விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பின்பு பிற்பகலில் சபரிமலையில் இருந்து பம்பைக்கு திரும்ப திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அப்பகுதியில் மரம் வேரோடு மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததால் அவர் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
இது குறித்து பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்புப் படையினர் உடனடியாகச் செயல்பட்டு, சாலையில் விழுந்த மரத்தை விரைவாக அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
பின்னர், மரம் முழுவதுமாக அகற்றப்பட்ட பிறகு, குடியரசுத் தலைவர் அங்கிருந்து தனது அடுத்த நிகழ்ச்சிக்குத் தொடர்ந்து பயணமானார்.



