Close
மார்ச் 7, 2026 1:26 மணி

ஆக்ஸ்போர்டு யூனியன் விவாதத்தில் அதிரடி: பாகிஸ்தானை கதறவிட்ட இந்திய மாணவர்!

இந்திய சட்ட மாணவர் விரான்ஷ் பானுஷாலி (இடது) பாகிஸ்தானின் மூசா ஹராஜ்

ஆக்ஸ்போர்டு யூனியனில் “பாகிஸ்தான் மீதான இந்தியாவின் கொள்கை, பாதுகாப்பிற்கானது அல்ல; அது ஒரு மக்கள் விருப்ப அரசியல் உத்தி” என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தை முன்னின்று நடத்திய ஆக்ஸ்போர்டு யூனியன் தலைவர் மூசா ஹராஜ், ஒரு திட்டமிட்ட நாடகத்தின் மூலம் பாகிஸ்தான் வெற்றி பெற்றதாக அறிவிக்க முயன்றார். ஆனால், இந்திய மாணவர் வீரன்ஷ் பானுசாலியின் வாதங்கள் அந்தச் சூழ்ச்சியைத் தவிடுபொடியாக்கியுள்ளன.

பாகிஸ்தான் அமைச்சரின் மகனும் திட்டமிட்ட சதியும்

இந்த விவாதத்தை ஒருங்கிணைத்த மூசா ஹராஜ், பாகிஸ்தானின் மத்திய பாதுகாப்பு உற்பத்தித் துறை அமைச்சரின் மகன் ஆவார். இந்த விவாதத்தில் பங்கேற்க இந்தியத் தரப்பில் வழக்கறிஞர் ஜே. சாய் தீபக் மற்றும் எம்.பி பிரியங்கா சதுர்வேதி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அவர்கள் வர முடியாத வகையில் மிகக் கடைசி நேரத்தில் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

இதனைப் பயன்படுத்தி, “இந்தியா விவாதத்திலிருந்து பின்வாங்கிவிட்டது” எனக்கூறி பாகிஸ்தான் வெற்றி பெற்றதாக ஒரு பிம்பத்தை உருவாக்க மூசா ஹராஜ் முயன்றார்.

இந்த விவாதத்தில் இந்திய சட்ட மாணவரான வீரன்ஷ் பானுசாலி கலந்துகொண்டு, பாகிஸ்தானின் வாதங்களை ஆதாரங்களுடன் உடைத்தெறிந்தார்.

மும்பையில் பிறந்து வளர்ந்த வீரன்ஷ் பானுசாலி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று வருகிறார். நவம்பர் 26-ஆம் தேதிக்கு அடுத்த நாள் நடைபெற்ற இந்த விவாதத்தில், அவர் தனது தனிப்பட்ட வலியைப் பகிர்ந்து கொண்டார்

யார் இந்த வீரன்ஷ் பானுசாலி?
வீரன்ஷ் பானுசாலிக்கு இந்தப் போர் வெறும் அரசியல் சார்ந்ததல்ல; இது உணர்வுப்பூர்வமானது. 2008-ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய 26/11 தாக்குதலின் போது, வீரன்ஷிற்கு வயது வெறும் இரண்டு. அப்போது அவர் தனது பெற்றோருடன் மும்பை ட்ரைடென்ட் ஹோட்டலில் தங்கியிருந்தார். பயங்கரவாதிகள் ஹோட்டலுக்குள் நுழைந்து கண்மூடித்தனமாகச் சுட்டபோது, நூலிழையில் உயிர் பிழைத்தவர்களில் இவரும் ஒருவர்.

பாகிஸ்தான் தன்னை ஒரு ‘பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு’ என்று சித்தரிக்க முயன்றபோது, வீரன்ஷ் தனது உரையில் அனல் பறக்க விட்டார். அவர் தனது உரையில், மும்பை பற்றி எரியும்போது தொலைக்காட்சியின் முன் அமர்ந்து என் தாயின் குரலில் இருந்த நடுக்கத்தையும், தந்தையின் முகத்தில் இருந்த இறுக்கத்தையும் பார்த்தவன் நான். மூன்று இரவுகள் மும்பை உறங்கவில்லை, நானும் உறங்கவில்லை.

பாகிஸ்தான் தரப்பு வாதங்களை முறியடிக்க எனக்கு அலங்கார வார்த்தைகள் தேவையில்லை, ஒரு ‘காலண்டர்’ போதும். 1993 மும்பை குண்டுவெடிப்பு நடந்தபோது இந்தியாவில் தேர்தல் இல்லை. அது ஓட்டுக்காகச் செய்யப்பட்டதல்ல; இந்தியாவின் பொருளாதார முதுகெலும்பை உடைக்கத் திட்டமிட்டு நடத்தப்பட்ட போர்.

மார்ச் 1993ல், பிளாசா சினிமாவில் ஆர்.டி.எக்ஸ் வெடிபொருட்கள் வெடித்தன… 257 பேர் இறந்தனர்… மார்ச் 1993 இல் தேர்தல் நடந்ததா? இல்லை. தாவூத்தும் ஐ.எஸ்.ஐயும் இந்தியாவின் நிதி முதுகெலும்பை உடைக்க விரும்பியதால் அது வந்தது. அது மக்கள் மீதான வெறுப்பு அல்ல. அது ஒரு போர் நடவடிக்கை.

26/11 தாக்குதலுக்குப் பிறகு அப்போதைய காங்கிரஸ் அரசு ராஜதந்திர ரீதியாகப் பொறுமை காத்தது. ஆனால் அது அமைதியைத் தரவில்லை; மாறாக பதான்கோட், உரி மற்றும் புல்வாமா தாக்குதல்களையே தந்தது. தற்போதைய இந்தியாவின் பதிலடி என்பது ‘அரசியல்’ அல்ல, அது ‘தொழில்முறைப் பாதுகாப்பு. மேலும் இந்த நடவடிக்கை ஒன்பது ஏவுதளங்களை துல்லியமாக அகற்றுவதாகும். குற்றவாளிகளை நாங்கள் தண்டித்தோம். பின்னர் நாங்கள் நிறுத்தினோம். நாங்கள் படையெடுக்கவில்லை. நாங்கள் ஆக்கிரமிக்கவில்லை.

பாகிஸ்தானால் தன் நாட்டு மக்களுக்கு ரொட்டி (உணவு) கொடுக்க முடியவில்லை. அதனால் அவர்களுக்கு ‘சர்க்கஸ்’ (யுத்த வேடிக்கை) காட்டுகிறது. வறுமையை மறைக்க போர் என்ற பிம்பத்தை அந்நாடு பயன்படுத்துகிறது என்று கடுமையாக விமர்சித்தார்.

இந்தியாவின் முக்கியப் பிரமுகர்களைத் தந்திரமாகத் தடுத்ததன் மூலம் பாகிஸ்தான் வெற்றி பெற நினைத்தது. ஆனால், ஒரு இந்திய மாணவரின் ஒற்றை உரை ஒட்டுமொத்த பாகிஸ்தான் தரப்பையும் நிலைகுலையச் செய்துள்ளது.

இந்தியா போரை விரும்பவில்லை, வெங்காயத்தையும் மின்சாரத்தையும் வர்த்தகம் செய்யும் ஒரு சாதாரண அண்டை நாடாகவே இருக்க விரும்புகிறது. ஆனால் பயங்கரவாதம் நின்றால் மட்டுமே அது சாத்தியம் என்ற அவரது வரிகள் உலக அரங்கில் இந்தியாவின் குரலாக எதிரொலிக்கின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top