இந்திய ஆயுதப்படைகளில் பெண்களின் பங்களிப்பு கடந்த பத்து ஆண்டுகளில் வியக்கத்தக்க வகையில் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2014ம் ஆண்டில் சுமார் 3,000-ஆக இருந்த பெண் அதிகாரிகளின் எண்ணிக்கை, தற்போது 11,000-ஐக் கடந்துள்ளதாக அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றில் பெண்களின் தற்போதைய நிலை குறித்த விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த பத்து ஆண்டுகளில் பெண்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பது வெறும் புள்ளிவிவர வளர்ச்சி மட்டுமல்ல, அது ராணுவ நிறுவனங்களின் அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள ஒரு “பெரிய மாற்றத்தை” பிரதிபலிக்கிறது. தேசிய பாதுகாப்பு அகாடமி என்.டி.ஏ-வில் பெண்களின் சேர்க்கை கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளது. 2025 மே மாதம் 17 பெண் கேடட்களும், நவம்பர் மாதம் 15 பெண் கேடட்களும் பயிற்சியை முடித்து வெளியேறவுள்ளனர். இன்று பெண்கள் வெறும் மருத்துவப் பணிகளில் மட்டுமல்லாமல், போர் விமானிகளாகவும், லெப்டினன்ட் ஜெனரல் அந்தஸ்திலான உயர் பதவிகளிலும், முக்கியப் பிரிவுகளின் கமாண்டர்களாகவும் செயல்பட்டு வருகின்றனர். முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட முக்கிய பொறுப்புகளில் பெண்கள் அமர்த்தப்படுவது, இந்திய பாதுகாப்புப் படையில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ளது என கூறியுள்ளது
இந்திய ராணுவத்தில் பெண்களின் பயணம் நீண்ட நெடியது. 1958 முதல்முறையாக பெண் மருத்துவர்களுக்கு ராணுவ மருத்துவப் பிரிவில் ஆண்களுக்கு இணையான நிரந்தரப் பணி வழங்கப்பட்டது. 1992 ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்று பிரிவுகளிலும் பெண்கள் அதிகாரி நிலையில் முதன்முதலில் சேர்க்கப்பட்டனர். 1992 விமானப்படை போர் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில் பெண்களைச் சேர்க்கத் தொடங்கியது. 2024-25 ‘நாரி சக்தி’ திட்டத்தின் கீழ் என்.டி.ஏ போன்ற உயர்மட்டப் பயிற்சி மையங்களில் பெண்கள் அதிகளவில் சேர்க்கப்படுகின்றனர்.
இந்திய ஆயுதப்படைகளில் பெண்களின் எதிர்காலப் பாதை இன்னும் விரிவான பங்களிப்பை நோக்கிச் செல்கிறது. ‘நாரி சக்தி’ முன்முயற்சிகள், சீர்திருத்தங்கள் மற்றும் பாலின சமத்துவத்திற்கான நிறுவன ரீதியான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம், வரும் காலங்களில் பெண்கள் இன்னும் பெரிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்கள் என்று அரசு உறுதியளித்துள்ளது.
தற்போதுள்ள காலிப் பணியிடங்களை அதிகரிப்பது மற்றும் அனைத்துப் பிரிவுகளிலும் பெண்களுக்குச் சம வாய்ப்புகளை வழங்குவது ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் பாதுகாப்பு நிலப்பரப்பை பெண்கள் மாற்றி அமைத்து வருகின்றனர்.




