Close
மார்ச் 11, 2026 11:04 மணி

ஈரானிய வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் ஆலோசனை

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் -கோப்பு படம்

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை ஈரானிய வெளியுறவு அமைச்சர் செய்யது அப்பாஸ் அரகச்சியுடன் விரிவான தொலைபேசி உரையாடலை மேற்கொண்டார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் தொடங்கியதில் இருந்து இரு அமைச்சர்களுக்கும் இடையே நடைபெறும் மூன்றாவது உரையாடல் இதுவாகும். குறிப்பாக, உலகின் 20 சதவீத எண்ணெய் மற்றும் எல்என்ஜி போக்குவரத்து நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தியை  ஈரான் தற்காலிகமாக முடக்கியுள்ள சூழலில், இந்தியாவின் எரிசக்தி தேவைகளைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது.

ஈரானிய அமைச்சருடனான பேச்சுவார்த்தை குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஜெய்சங்கர், “ஈரானிய வெளியுறவு அமைச்சர் அரகச்சியுடன் இன்று மாலை தற்போதைய மோதல்கள் மற்றும் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து விரிவாக ஆலோசித்தேன். இது தொடர்பாகத் தொடர்ந்து தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டோம்,” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தாபா காமேனி நியமிக்கப்பட்ட பிறகு இரு அமைச்சர்களுக்கும் இடையே நடைபெறும் முதல் உரையாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், மார்ச் 4-ம் தேதி இலங்கை அருகே அமெரிக்காவால் ஈரானிய போர்க்கப்பல் ஒன்று மூழ்கடிக்கப்பட்டது குறித்து இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டதா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

ஈரானைத் தவிர்த்து, ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் ஜோஹான் வேட்புல்  மற்றும் தென்கொரிய வெளியுறவு அமைச்சர் சோ ஹியூன் ஆகியோரிடமும் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார். மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதன் உலகளாவிய தாக்கம் குறித்து இரு அமைச்சர்களும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

தென்கொரிய அமைச்சருடன் பேசிய ஜெய்சங்கர், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும், எரிசக்தி துறையில் இந்தப் போர் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்தும் விவாதித்தார். தென்கொரிய அதிபர் லீ ஜே-மியுங் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இந்தியா வர வாய்ப்புள்ள நிலையில், இந்தத் தூதரகப் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெறுகிறது.

ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியுள்ளதால், உலக சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது உலகப் பொருளாதாரத்திலும் பாதுகாப்பிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பொருளாதார ரீதியான பாதிப்புகளைக் குறைக்கவும் உலக நாடுகளுடன் நெருக்கமான தொடர்பைப் பேண இந்தியா முடிவு செய்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top