Close
செப்டம்பர் 20, 2024 1:44 காலை

குழந்தைகள் இலக்கியத்துக்கான படைப்பாளிகளின்  எண்ணிக்கை அதிகரிக்க  வேண்டியது அவசியம்: ஆட்சியர் கவிதா ராமு

புதுக்கோட்டை

புதுகை திருக்கோகர்ணம் வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் கவிஞர் தங்கம் மூர்த்தி பதிப்பித்த ‘அழ வள்ளியப்பா நூற்றாண்டு விழா மலரை’ மாவட்ட ஆட்சியர் கவிதாராமு வெளியிட அழ.வள்ளியப்பா மகள் முனைவர் தேவி நாச்சியப்பன் பெற்றுக்கொண்டார்.

குழந்தைகள் இலக்கியத்துக்கான படைப்பாளிகளின்  எண்ணிக்கை அதிகரிக்க  வேண்டியது அவசியம் என்றார் புதுக்கோட்டை மாவட்ட  ஆட்சியர் கவிதா ராமு.

புதுக்கோட்டை வாசகர் பேரவை மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா நூற்றாண்டு விழா சிறப்பாக இன்று (30.11.2022) நடைபெற்றது. பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமை வகித்தார். வாசகர் பேரவை செயலர் பேராசிரியர் சா.விஸ்வநாதன் வரவேற்புரையாற்றினார்.

குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு  பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கி கௌரவித்தார். முன்னதாக மாணவர்கள் வரைந்த அழ.வள்ளியப்பா நூற்றாண்டு விழா ஓவியக்கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்து பார்வையிட்டார்.

கவிஞர் தங்கம் மூர்த்தி பதிப்பித்த ‘அழ. வள்ளியப்பா நூற்றாண்டு விழா மலரை’ மாவட்ட ஆட்சியர் கவிதாராமு வெளியிட ,அழ.வள்ளியப்பா மகள் முனைவர் தேவி நாச்சியப்பன் பெற்றுக்கொண்டார்.

நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி மாவட்ட ஆட்சியர் கவிதாராமு  பேசும் பொழுது ‘நான் சிறுவயதாக இருந்தபோதிலிருந்து இன்றைக்கு வரையிலும் குழந்தைப் பாடல்கள் என்றால் அது அழ.வள்ளியப்பாவின் பாடல்கள்தான்.  அழ.வள்ளியப்பா அளவுக்கு வேறு எந்த குழந்தை இலக்கியக் கவிஞர்களும் குழந்தைகளின் மனதில் இடம்பிடிக்கவில்லை.

குழந்தைகளிடம் புத்தகங்கள் வாசிக்கின்ற பழக்கத்தை நாம் உருவாக்க வேண்டும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைக் குழந்தைகள் தினசரி வழக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டியது மிக அவசியம். அழ.வள்ளியப்பா பாடல்களை ராகத்தோடு பாடிப் பார்க்க வேண்டும். அழ.வள்ளியப்பா சமூகத்திற்கு பயன்தரும் கருத்துகளைச் சொல்லக்கூடிய படைப்புகளை உருவாக்கியிருக்கிறார். அந்தப் படைப்புகளைத் தொடர்ந்து குழந்தைகளிடம் கொண்டு சேர்க்க வேண்டியது ஆசிரியர்களின் கடமை.

தற்போது சிறுவர்களுக்கான படைப்புகளை உருவாக்குபவர்கள் எண்ணிக்கைக் குறைவாகவே இருக்கிறது. விழியன், விஷ்ணுபுரம் சரவணன், மு.முருகேஷ் போன்ற ஒரு சிலரே குழந்தைகளுக்காக எழுதி வருகிறார்கள். குழந்தைகளுக்கான இலக்கியம் படைப்பவர்கள் எண்ணிக்கை உயர வேண்டியது அவசியம். குழந்தைகளே அழ.வள்ளியப்பாவுடைய பாடல்களை வாழ்க்கைப் பாடமாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்றார் ஆட்சியர் கவிதாராமு.

புதுக்கோட்டை
குழந்தைக்கவிஞர் அழ. வள்ளியப்பா நூற்றாண்டு விழா பரிசளிக்கிறார் ஆட்சியர் கவிதாராமு

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா  பேசுகையில்,  குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாதான் தன் பால்ய கால ஹீரோ. அழ.வள்ளியப்பா நடத்திய கோகுலம் சிறுவர் சங்கம் என்ற அமைப்பின் உறுப்பினர் அட்டையை தான் குழந்தையாக இருக்கும் போது கிடைக்கப்பெற்று அடைந்த பரசவத்தை நாற்பது ஆண்டுகள் கழித்து நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகி அதற்கான அடையாள அட்டையை பெற்றபோது அதே பரவசத்தை பெற்றேன். என் வாசிப்புப் பழக்கம் அழ.வள்ளியப்பாவிடமிருந்தே தொடங்கியது என்பதை பெருமைக்குரியதாகவே  கருதுகிறேன் என்றார் அவர்.

இந்நிகழ்வில் அழ.வள்ளியப்பாவின் குடும்பத்தினர் வ.அழகப்பன், அலமேலு அழகப்பன், சு.அருணாசலம், உமா வள்ளியப்பன், தேவி நாச்சியப்பன், சு.ஆ.அழகப்பன், வள்ளியப்பன், நாச்சியப்பன், சீத்தாலெட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

புதுக்கோட்டை
. இந்நிகழ்வில் அழ.வள்ளியப்பாவின் குடும்பத்தினர் திரு வ.அழகப்பன், அலமேலு அழகப்பன், சு.அருணாசலம், உமா வள்ளியப்பன், தேவி நாச்சியப்பன், சு.ஆ.அழகப்பன், வள்ளியப்பன், நாச்சியப்பன், சீத்தாலெட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

இதில், அரசு சிறப்பு வழக்கறிஞர் எம்.செந்தில்குமார், பேராசிரியர் எம்.கருப்பையா, மகாத்மாரவிச்சந்திரன், கல்வித்துறை கணேஷ், டாக்டர் ச.ராமதாஸ், சத்தியராம் மு.ராமுக்கண்ணு, ப.முத்துப்பாண்டியன், எஸ்.டி.பாலகிருஷ் ணன்,  கே.சதாசிவம்,   கவி.முருகபாரதி, கவிஞர்கள் பீர்முகமது, புதுகை புதல்வன், சோலச்சி, நமச்சிவாயம், சுதந்திரராஜன், பொன்னமராவதி சந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

குழந்தைக்கவிஞரின் அன்பு மகள் பால சாகித்ய புரஷ்கார் விருதாளர் முனைவர் தேவி நாச்சியப்பன் தனது ஏற்புரையில்,  தன் தந்தையுடனான பாடல் பற்றிய பசுமை நினைவுகளைப் பள்ளி மாணவிகளோடு பகிர்ந்து கொண்டார். நிறைவாக பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கணியன் செல்வராஜ் மற்றும் தமிழாசிரியர் உதயகுமார், ஒருங்கிணைப்பாளர் கௌரி மற்றும் ஆசிரியர்கள்  இணைந்து  செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top