Close
செப்டம்பர் 20, 2024 3:53 காலை

கவிதைப்பக்கம்… மு.பெரியசாமியின்…வெற்றுக்காகிதம்….

புதுக்கோட்டை

வெற்றுக்காகிதம்.. டாக்டர் பெரியசாமி

வெற்றுக்காகிதம்….

மனம் பட்டாலோ
மை பட்டாலோ
குணம் வெளிப்படும்
பற்றுக்காகிதம்
அச்சு இயந்திரங்கள்
ஆரத்தழுவி
அழகாக்கும்
வெற்றுக்காகிதம்!

தேர்வுக்கு வரும்
தேர்தல் சேதி தரும்
வழக்காடு மன்றம் சென்று
வழுவாத நீதி தரும்
வரவு செலவு
கணக்கெழுதி
வாழ்க்கைக்கு
நிதியும் தரும்
இது வெற்றுக்காகிதம்!

எழுத்துக்களை ஏந்தவும்
எண்ணங்களில் நீந்தவும்
கற்பனை ஓவியங்களை
காதல் கொண்டு தீண்டவும்
கப்பலாக மிதக்கவும்
கற்றுக்கொள்ளும்
வெற்றுக்காகிதங்கள்

வெற்றுக்காகிதங்கள்
வரலாற்று சுவடுகளாகும்
வாழ்வியல் இலக்கியமாகும்
வண்ணங்களை ஏற்று
வரை படங்களாகும்
வாய் பேசும்
வாத்தியங்களாகும்
வற்றாத அறிவு கடல்களாகும்!

வெற்றுக்காகிதங்கள்
திருக்குறளை தாங்கும்
திருவாசகத்திற்கு ஏங்கும்
கற்பனை கவிதைகள்
பொங்கும்
காலத்தால் அழியாத
காவியங்கள் – அதில்
தங்கும்!

வெற்றுக்காகிதங்கள்
வறுமை நிலையில்
வார்த்தைகள் இல்லாத- கடன்
பற்றுக்காகிதங்கள்,
சொத்தாகும்
சில நேரம்
பத்தாகும்
பட்டமாக பறக்கும்……
படித்த பல்கலை பட்டமாகவும் கையில்வந்து
சிறக்கும்!

வாழ்க்கை
வெற்றுக்காகிதமாகவே
தொடங்குகிறது…..
அன்பும் பாசமும்
அதை பற்றுக்காகிதமாக்கி…..
நேர்மையான கடமையும்
நிலையான கல்வியும்
அதை
வெற்றி காகிதமாக்குகிறது!

….மருத்துவர்மு.பெரியசாமி
புதுக்கோட்டை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top