தமிழ் கிராம வாழ்க்கையின் இதயத்தையும், ஆன்மாவையும் படம் பிடிக்கும் ஒரு கிராமப்புற குடும்பக் கதையினை, இயக்குனர் பாண்டிராஜ் தனக்கே உரிய நெறியாள்கை முறைமையுடன், நேர்மையுடன் படைத்திருக்கிறார்.
இந்தப் படம் ஒரு சராசரி குடும்ப பின்னணியில் இயங்கும் கிராமத்து மனிதர்களின் தமிழ் கலாச்சார, மரபுகள் மற்றும் உணர்ச்சிகரமான உரையாடல்களை உள்ளடக்கியவை. அவை அனைத்தையும் யதார்த்தமான காட்சிகள் மற்றும் ஆழமான கதைசொல்லல் மூலம் உயிர்ப்பிக்க பட்டிருக்கின்றன.
ஒளிப்பதிவு கிராமப்புற சூழலை அழகாக எடுத்துக் காட்டுகிறது, குறிப்பாக மதுரை போன்ற மாநகரங்களில் உணவுக்கு கொடுக்கும் முக்கியத்துவம், அந்த பிராந்தியங்களில் பிரசித்துப் பெற்ற பரோட்டா, குருமா, இறைச்சி வகைகள் பலவற்றை விளக்கி, அவை தயாரிக்கப்படுவதை, காட்சிப்படுத்திய பல தருணங்கள் நம் வாயில் நீர் சுரக்க செய்துவிடுகிறது.
படம் பார்த்து முடித்தவுடன் பரோட்டா சால்னா சாப்பிடணும் போல் இருந்தது. இரவு பதினோரு மணிக்கு, இங்கிலாந்தில் எந்த கடையில் கிடைக்கப் போகிறது!! .
தலைவன் தலைவியின் வலிமையான அம்சம் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் ஜோடி. அவர்களின் கெமிஸ்ட்ரி மற்றும் அவர்களின் பாத்திரங்களின் மீதான ஆளுமை ஆகியவை படத்தை கணிசமாக உயர்த்துகின்றன.
பாசத்திற்கும் உராய்விற்கும் இடையில் தொடர்ந்து சிக்கித் தவிக்கும் ஒரு தம்பதியை நம்பத்தகுந்த முறையில் காட்டி, அவர்கள் இருவரின் உணர்ச்சி ஆழம் அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. எளிதில் ஈர்க்க கூடியதான அவர்களின் காதல், போராட்டங்கள் மற்றும் உணர்ச்சிப் பயணத்துடன் நாமும் எளிதாக இணைத்துக் கொள்ள முடியும்.
திரையில் காட்டப்படும் பல சம்பவங்கள், சம்பாஷனைகள், நம் லௌகீக வாழ்க்கையில் நம் குடும்பத்தில், உறவினர்கள் மத்தியில் சந்தித்தவையாக இருப்பவையே.
க்ளைமாக்ஸுக்கு முன் ஒரு தனித்துவமான காட்சி வருகிறது, அங்கு விஜய் சேதுபதி ஒரு பொறுப்பான கணவன் மற்றும் மகனாக இருப்பதன் அழுத்தத்தை ஒரு இதயப்பூர்வமான நடிப்பை தனக்கே உரிய பாணியில் தாறுமாறாக வழங்குகிறார்.
நாயக பிம்பம் உள்ள விஜய் சேதுபதியை, தூக்கலாக காட்டி விடாமல், கதாபாத்திர நாயகனாக மட்டும் காட்டி இருப்பதற்கு இயக்குனரை பாராட்டலாம்.
சந்தோஷ் நாராயணனின் இசை மற்றும் பின்னணி இசை படத்தின் தொனியை முழுமையாக பூர்த்தி செய்கிறது.
லேசான மற்றும் உணர்ச்சிபூர்வமான காட்சிகளை நுட்பமான தாக்கத்துடன் மேம்படுத்துகிறது. கதைக்களம், துணை பாத்திரங்கள் அனைத்தும் சிக்கல் இல்லாமல் திரைக்கதையில் சொல்லப்பட்டிருக்கிறது. யோகி பாபு உட்பட அத்தனை பாத்திரங்களின் பங்களிப்பு, சூழ்நிலையைப் பொறுத்து மாறும் தொனியில் படைக்கப்பட்டிருக்கிறது.
ஒருபோதும் அவர்களுடைய திரை இருப்பை கட்டாயப்படுத்தப்படுவதில்லை. குறைத்து கூட்டிக் காட்டப்படவில்லை. தங்கள் தேர்ந்த நடிப்பு மூலம் படத்தை எளிதாகக் கொண்டு செல்கிறார்கள். இயக்கம் யதார்த்தத்தின் வலுவான உணர்வையும், உணர்ச்சி ஆழத்தையும் கொண்டுள்ளது எனலாம்.
மொத்தத்தில்.., திருமண வாழ்க்கையில் தம்பதியினரின் உறவு உடைவதற்கும், ஒட்டுவதற்கும் சொந்த பந்தங்களும் ஒருவிதத்தில் காரணமாக இருப்பதை நகைச்சுவையுடன் சொல்லி, கணவன் மனைவி உறவில் மற்றவர்களின் தலையீடு எவ்வளவு குடைச்சல் கொடுக்கிறது என்பதை, எந்த வித திணிப்பும் இல்லாமல் இயல்பாக தொட்டிருக்கிறார் இயக்குனர்.
கதாபாத்திரங்களின் பெயர்கள் அனைத்துமே அழகாக இருந்தன. நாம் அதை கவனிக்க தவறவில்லை.
ஆக.., ஆகாச வீரன், பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் பிடித்த வீரனாகிறார்.
இங்கிலாந்திலிருந்து
சங்கர் 🎋




