மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி திருவெண்ணெய்நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார், ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் குமார், முத்துகுமரன் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
கடந்த 6- மாதங்களாக அரைகுறையாக கிடப்பில் போடப்பட்டு உள்ள அ.புதூர் கிராமத்தில் விவசாயிகளின் நிலங்களுக்கு செல்லும் பாதை மடிக்கும் பணியை உடனடியாக தொடங்கி தார்ச்சாலையாக அமைத்து கொடுக்க வேண்டும்,
தானியம் உலர்த்த தனியாக களம் அமைத்து கொடுக்க வேண்டும், நில எடுப்பு செய்து சுடுகாடு அமைத்து கொடுக்க வேண்டும்,
இருவேல்பட்டிலிருந்து காரப்பட்டு செல்லும் தார்ச்சாலை கடந்த 45 ஆண்டு காலமாக மக்கள் பயன்பாட்டில் உள்ளது. புதிய தார்ச்சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு ஓராண்டு ஆகியும் வனத்துறையின் தடையினால் வேலை நடைபெறாமல் சாலை குண்டும், குழியுமாக கிடக்கிறது. அரசு தலையிட்டு வனத்துறை தடையை நீக்கி உடனடியாக தார்ச்சாலை அமைத்துத் தர வேண்டும்.
இருவேல்பட்டு -வண்டிக்கண்ணாறு சாலையை தார்ச்சாலையாக அமைத்து கொடுக்க வேண்டும்,
காரப்பட்டு – எல்லைக்கண்ணாறு பாதையை சிமெண்ட் சாலையாக அமைத்துக்கொடுக்க வேண்டும்,
வடக்கு வெளிப்பாதையின் அருகில் உள்ள வாய்க்காலை தூர்வாரி முழுமையாக சிமெண்ட் கான்கிரீட் வாய்க்காலாக அமைத்துக் கொடுக்க வேண்டும்,
காந்தலவாடி கிராமத்தில் 20-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு 2023-24 ல் தொகுப்பு வீடு கட்ட அனுமதி பெற்று கம்பி, சிமெண்டை ஏமாற்றிய ஊராட்சி செயலாளர் இன்று வரை வீடு கட்டித் தராமல் ஏமாற்றி வருகிறார். இவருக்கு இன்ஜினியரும், ஓவர்சீயரும் உடந்தையாக செயல்பட்டுள்ளனர். உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொகுப்பு வீடுகளை முடித்துத்தர வேண்டும்,
மழையம்பட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் குடிநீர் டேங்க் அமைந்துள்ள 0.36 செண்ட் அரசு தரிசு நிலத்தை ஊராட்சி மன்றத்தின் பெயருக்கு பட்டா மாற்றம் செய்து, சுற்றுச்சுவர் அமைத்து சமுதாயக்கூடம் கட்டிக்கொடுக்க வேண்டும்,
ஆமூர் கிராமத்தில் தொடர்ச்சியாக 100 நாள் வேலை,ரேஷன் கடையை அனைத்து வேலை நாட்களிலும் திறந்து தடையின்றி பொருட்கள் வழங்க வேண்டும்,
வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள அனைவருக்கும் தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் வட்டக்குழு உறுப்பினர்கள் ரஞ்சித், பழனி, .பாலகிருஷ்ணன், அண்ணாமலை தட்சணாமூர்த்தி, மணிகண்டன், தேவேந்திரன், கோவிந்தராஜ், வீரப்பன், பூரணி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.