Close
மார்ச் 7, 2026 4:18 மணி

கரூரில் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் உயிரிழப்பு

கரூர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 31 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

2026 சட்டப்பேரவை தோ்தலையொட்டி, விஜய் கடந்த 13-ஆம் தேதி முதல் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறாா். அதன்படி செப்டம்பர் 13-இல் திருச்சி, அரியலூா், செப்டம்பர் 20-இல் நாகை, திருவாரூா் ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டாா்.

தொடா்ந்து, இன்று நாமக்கல்லிலும் கரூரிலும் அவர் பிரசாரம் மேற்கொண்டார். இந்த நிலையில் விஜய்யின் கரூர் பிரசாரத்தின்போது கூட்டநெரிசல் ஏற்பட்டது

கூட்டத்தில் மயக்கமடைந்த 40க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் விரைந்தனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு நிலவுகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மேலும் சிலர் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கரூரில் உள்ள அனைத்து ஆம்புலன்ஸ் வாகனங்களும், மயக்கமுற்ற நபர்களை ஏற்றிச் செல்வதற்காக வேலுச்சாமிபுரத்திற்கு வந்தவண்ணம் உள்ளது. சட்ட ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கரூருக்கு விரைய முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்

“கரூர் அரசு மருத்துவமனைக்கு 29 பேரின் உடல்கள் இறந்த நிலையிலேயே கொண்டு வரப்பட்டுள்ளன. இவர்கள் பிரசாரக் கூட்டத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனையில் உள்ளவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை. 45க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் இருந்து இன்னும் சடலங்கள் வரலாம் என்றும் அச்சத்தில் உள்ளோம்” என அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறியுள்ளார்.

இதனிடையே கரூர் மாவட்ட ஆட்சியரிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின் நிலவரம் குறித்து கேட்டறிந்தார். கரூருக்கு அமைச்சர்கள், காவல் உயர் அதிகாரிகள் உடனடியாக செல்ல முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top