Close
மார்ச் 7, 2026 5:47 மணி

தவெக நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ்குமாரின் முன் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி

சென்னை உயர்நீதிமன்றம்

தவெக நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ்குமாரின் முன் ஜாமீன் கோரிய மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் கடந்த செப். 27ம் தேதி, நாமக்கல்லில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் மீது நாமக்கல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் காவல்துறையினர் தன்னை கைது செய்யக் கூடும் எனக் கூறி, முன் ஜாமீன் கேட்டு சதீஷ்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நான் எந்த குற்றமும் செய்யவில்லை, அரசியல் காரணங்களுக்காக வழக்கில் என்னை சேர்த்துள்ளனர். சம்பவ இடத்தில் இருந்த ஒரே காரணத்துக்காக தனக்கு எதிராக இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கில், காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக இருக்கிறேன். எனவே முன் ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு, நீதிபதி செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வக்கீல் சந்தோஷ், அனைத்து விதிகளையும் பூர்த்தி செய்வதாக கூறி, கூட்டம் நடத்த மனுதாரர் அனுமதி பெற்றார். அவரது கட்சியினரின் செயல்பாடுகளால் ரூ. 5 லட்சம் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

இது தவிர பொது சொத்துக்கள் சேதப்படுத்தியதாக மேலும் 8 வழக்குகள் அவருக்கு எதிராக பதியப்பட்டுள்ளதாக கூறி, சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்பட ஆதாரங்களை தாக்கல் செய்தார்.

இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் முருகவேல் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, கட்சியினர் அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், எதுவும் தெரியாது என மனுதாரர் எப்படி கூறலாம், கட்சியினரைக் கட்டுப்படுத்த தெரியாதா, பொறுப்புடன் செயல்பட வேண்டாமா என சரமாரியாக கேள்வி எழுப்பி, முன் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top