Close
மார்ச் 7, 2026 4:58 மணி

அரசியல் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் சித்தராமையா: மகன் யதீந்திராவின் பரபரப்பு அறிக்கை

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மகனும், காங்கிரஸ் சட்டமன்ற மேலவை உறுப்பினருமான யதீந்திரா சித்தராமையா, தனது தந்தை அரசியல் வாழ்க்கையின் “இறுதிக் கட்டத்தில்” இருப்பதாகக் கூறியதுடன், முற்போக்குச் சிந்தனைகள் கொண்ட தலைவர்களுக்கு வழிகாட்ட ஒரு தலைவர் தேவை என்றும் கூறியது, கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெலகாவியில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய யதீந்திரா, கொள்கை ரீதியிலான தலைமைக்கு ஆசைப்படும் தலைவர்கள் அரிது. சித்தராமையா தனது அரசியல் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் இருக்கிறார். இத்தகைய நேரத்தில், முற்போக்கான சிந்தனையுள்ளவர்களுக்கு, சித்தாந்தரீதியில் வழிகாட்டவும், தலைமை தாங்கவும் ஒரு தலைவர் தேவை என்று யதீந்திரா கூறினார்.

மூத்த காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான சதீஷ் ஜார்கிஹோலி முற்போக்குச் சித்தாந்தம் மற்றும் தத்துவ மதிப்புகளுடன் இணைந்து செயலாற்றும் ஒரு தலைவர் என்று நம்பிக்கை தெரிவித்த யதீந்திரா, அவர் இந்த வழிகாட்டும் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும், ஒரு முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.

எனினும், அவரது இந்தக் கருத்துகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், யதீந்திரா பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, தான் தனது தந்தையின் அரசியல் வாரிசைப் பற்றி பேசவில்லை என்றும், மாறாக, சித்தாந்த ரீதியிலான தலைமை குறித்து மட்டுமே பேசியதாகவும் விளக்கமளித்தார்.

யதீந்திராவின் இந்த கருத்துகள், கர்நாடக முதலமைச்சர் பதவியில் மாற்றம் ஏற்படலாம் என்ற ஊகங்களை உடனடியாகத் தூண்டியுள்ளது.

காங்கிரஸ் ஆட்சி அமைத்து ஐந்து ஆண்டு காலத்தின் பாதியை நவம்பரில் எட்டும் நிலையில், முதலமைச்சர் பதவி மாற்றப்படும் என்ற ஊகங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

துணை முதலமைச்சரான டி.கே. சிவக்குமாருக்கு, கட்சியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றதில் அவரது முக்கியப் பங்கைச் சுட்டிக்காட்டி, பல காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மறுபுறம், முதலமைச்சர் சித்தராமையாவோ, தான் ஐந்து ஆண்டு முழு பதவிக் காலத்தையும் நிறைவு செய்வேன் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

எனினும், முதலமைச்சர் பதவியில் மாற்றம் குறித்து எழும் பொது விவாதங்களை காங்கிரஸ் மேலிடம் தொடர்ந்து நிராகரித்து வருகிறது. கர்நாடக மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா இதுபோன்ற யூகங்கள் அனைத்தும் வெறும் ஊகங்களே என்று திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.

சித்தராமையா, கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மற்றும் காங்கிரஸ் மேலிடத்தின் ஒப்புதல் ஆகிய இரண்டும் தலைமை முடிவுகளில் அவசியம் என்று சமீபத்தில் வலியுறுத்தியிருந்தார். அவரது விசுவாசிகள் பலர் சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்தை மேலிடம் கணக்கில் கொள்ள வேண்டும் என்று கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top