Close
அக்டோபர் 5, 2024 7:04 மணி

நிவாரணம் வழங்கக் கோரி முன்னாள் எம்எல்ஏ தலைமையில் மீனவர்கள் சாலை மறியல்

சென்னை

திருவொற்றியூர்-எண்ணூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள்

மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி முன்னாள் எம்.எல்.ஏ. தலைமையில் சாலை மறியல் போராட் டம் நடத்தினர். இதனால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை திருவொற்றியூர், எண்ணூர் பகுதியில் அமைந்துள்ள அனைத்து மீனவ கிராமங்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரி மீனவர்களுக்கு நிவாரணம் கேட்டு முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன் தலைமையில் திருவொற்றியூர் எண்ணூர் விரைவு சாலையில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் பெய்த கனமழை காரணமாக மணலி பகுதியிலுள்ள தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறிய கழிவு எண்ணெய் கழிவு பக்கிங்காம் கால்வாய் வழியாக எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் கலந்தது. பிறகு வகடலோரப் பகுதிகளுக்கும் எண்ணெய்க் கழிவுகள் பரவி சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டது. இதனையடுத்து எண்ணெய் படலங்களை அகற்றும் பணியில் மாசு கட்டுப்பாட்டு வாரியம், சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, மீன்வளத்துறை உள்ளிட்ட வைகள் இணைந்து செயலாற்றி வருகின்றன.

இந்நிலையில் எண்ணூர் பகுதியில் அமைந்துள்ள கிராமங்களுக்கு மட்டுமே தமிழக அரசு நிவாரணம் வழங்கியுள்ளது. கடலோரப் பகுதியில் அமைந்துள்ள அனைத்துமீனவ கிராமங்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரி திருவொற்றியூர் தொகுதி சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் கே.குப்பன் தலைமையில் எண்ணூர் விரைவு சாலையில் எல்லையம்மன் கோயில் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டம் குறித்து கே.குப்பன் கூறியது:

தமிழக அரசு சார்பில் எண்ணூர் பகுதியிலுள்ள சில மீனவ கிராமங்களுக்கு மட்டுமே நிவாரணத் தொகை அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் இப்பகுதியிலுள்ள இதர மீனவ கிராமங்களுக்கு நிவாரணம் குறித்து அறிவிப்பு ஏதும் வெளியாக வில்லை. திருவொற்றியூர் பகுதியில் உள்ள 14 மீனவ கிராமங்கள் உள்ளன. முகத்துவாரத்தில் கலந்த எண்ணெய் கழிவு களால் கடந்த 20 நாள்களாக மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னையால் அனைத்து மீனவர்களுமே பாதிக்கப்பட்டுள்ளனர். படகுகள், வலைகள் சேதமடைந்துள்ளன. மீன்விற்கும் பெண்கள் கூட பாதிக்கப் பட்டனர். ஆனால் அரசு எண்ணூர் பகுதியில் உள்ள 6 மீனவ கிராமங்களுக்கு மட்டுமே நிவாரணம் அறிவித்துள்ளது. அனைத்து மீனவர்களுக்கும் தமிழக அரசு, சி.பி.சி.எல். நிர்வாகம் இணைந்து போதிய நிவாரணங்களை வழங்க வேண்டும். தமிழகஅரசு மீனவர்களை வஞ்சிக்கக் கூடாது உரிய நிவாரணங்களை வழங்கவில்லை எனில் தொடர் போராட்டம் நடத்துவோம் என்றார் குப்பன்.

போராட்டம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த தண்டையார் பேட்டை வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம், காவல் உதவி ஆணையர் சிதம்பர முருகேசன் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து போகும்படி வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் இதனை ஏற்க மறுத்ததால் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் முன்னூறுக்கும் மேற்பட்டோரை கைது செய்த போலீஸார் அவர்களை தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் சனிக்கிழமை மாலையில் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். சாலை மறியல் போராட்டத்தால் துறைமுகத்திற்குச் செல்லும் முக்கிய சாலையான எண்ணூர் விரைவு சாலையில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து  பாதிக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top