Close
ஏப்ரல் 3, 2025 4:30 காலை

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ரத்ன அங்கி சேவை

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஸ்ரீதாத தேசிகன் சாற்றுமுறை உற்வசத்தையொட்டி உற்சவர் வரதராஜப் பெருமாளும், பெருந்தேவித்தாயாரும் ரத்ன அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

விஜயநகர பேரரசின் ராஜகுருவாகவும், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலின் ஆதிகால தர்மகர்த்தாவாகவும் இருந்தவர் ஸ்ரீ தாத தேசிகன். இவரது சேவைகளைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் அவரது அவதார திருநாளில் வரதராஜப் பெருமாளும், தாயாரும் ரத்ன அங்கி அணிந்து ஆலய வளாகத்தில் உள்ள தாததேசிகன் சந்நிதிக்கு எழுந்தருளி அவருக்கு மரியாதை செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

ஸ்ரீதாத தேசிகன் சாற்றுமுறை உற்சவத்தையொட்டி திருமலையிலிருந்து ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பெருமாள் ரத்னஅங்கி அணிந்தாவறு இறங்கி பெருந்தேவித்தாயார் சந்நிதிக்கு எழுந்தருளினார்.
பின்னர் ரத்ன அங்கி அணிந்த பெருந்தேவித்தாயாரும், வரதராஜப் பெருமாளும் ஆலய வளாகத்தில் ஆழ்வார் சுற்றுப்பிரகாரத்தில் உள்ள ஸ்ரீதாத தேசிகன் சந்நிதிக்கு எழுந்தருளினர்.

தாயாரும்,பெருமாளும் அணிந்திருந்த ரோஜா மாலைகளை தாததேசிகனுக்கு சாற்றி மாலை மரியாதை செய்யும் நிகழ்வு நடைபெற்று சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. பின்னர் பெருமாளுக்கும், தாயாருக்கும் தாத தேசிகன் சந்நிதியிலியே சிறப்புத் திருமஞ்சனமும் நடைபெற்றது.

மாலையில் உற்சவர் வரதராஜப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் ஆலயத்தின் சந்நிதி தெருவில் உள்ள ஆஞ்சநேயர் சந்நிதிக்கு எழுந்தருளி தீபாராதனைகள் நடைபெற்று மீண்டும் தேசிகன் சந்நிதிக்கு எழுந்தருளினார்.

பின்னர் பெருமாளும், தாயாரும் ஆழ்வார் சுற்றுப்பிரகாரத்தை வலம் வந்து தாயார் அவரது சந்நிதிக்கும், பெருமாள் திருமலைக்கும் எழுந்தருளினர்.

விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சீனிவாசன் மற்றும் கோயில் பட்டாச்சாரியார்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

ரத்ன அங்கி அணிந்து பெருமாளும்,தாயாரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வு ஸ்ரீ தாத தேசிகன் அவதார நட்சத்திர நாளிலும், மற்றொன்று வைகுண்ட ஏகாதசி திருநாள் என இரு நாட்கள் மட்டுமே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top