Close
செப்டம்பர் 20, 2024 7:07 காலை

சமூக சிந்தனையாளர் எம்.எஸ்.உதயமூர்த்தி நினைவு நாளில்…

இங்கிலாந்திலிருந்து சங்கர்

சமூக சிந்தனையாளர் எம்.எஸ். உதயமூர்த்தி

மயிலாடுதுறை சு.உதயமூர்த்தி என்கிற எம்.எஸ்.உதயமூர்த்தியின் நினைவு நாளில் அவரைப்பற்றி…

எம். எஸ். சுப்புலட்சுமி,எம். எஸ் .விஸ்வநாதன், எம். எஸ். சுவாமிநாதன்
எம். எஸ். தோனி என்று அறியப்படுகிற பிரபலங்கள் அவரவர் துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள். அந்த வரிசையில் எம் எஸ் உதயமூர்த்தி அவர்கள் சிறந்த கல்வியாளர், சமூக நலன் சார்ந்த சிந்தனையாளர். நாளைய இந்தியா, இளைஞர்கள் கையில் என்று நம்பியவர். இளைஞர்களை தவறான திசையில் செல்லாமல் நெறிப்படுத்த எழுத்து மூலமும்,பேச்சு மூலமும் அவர் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியவை.

மனித வளம் பற்றி பல ஆண்டுகளுக்கு முன் பேசியவர். வெளிநாட்டில் பல ஆண்டுகள் இருந்தாலும் இந்தியாவின் மேல் மாறாத பற்று வைத்திருந்தவர். சீடன் தயாராகும் போது குரு தோன்றுவார் என்ற இவருடைய சொற்கள் மறக்க முடியாதவை.

25 ஆண்டு கால அமெரிக்க தொழில் அதிபர் வாழ்க்கையை உதறி தள்ளி விட்டு, நாட்டுப்பற்று காரணமாக தாயகம் திரும்பியவர், நதிகளை இணைப்பதன் மூலம் நாட்டை வளம் கொழிக்க செய்யலாம் என்று விரும்பியவர்.

கண்ட இலட்சிய சமூகத்தை நோக்கி சமகால இளைஞர்களை பொறுப்புடன் வழிநடத்தியவர் என்ற சாதனை அவரின் புகழை நிலைபெறச் செய்யும். பொதுப்பணிகளில் அனைத்திற்கும் அரசாங்கத்தை எதிர்பார்க்காமல், நாமாக ஒன்றிணைந்து சிலவற்றை சாதிக்கலாம் என நடத்தியும் காட்டியவர் டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி.

 இவருடைய உன்னால் முடியும் தம்பி என்ற வார்த்தைகள் மந்திரம் போல கல்லூரிப் பருவத்து இளைஞர்கள் மத்தியில் உச்சரிக்கப்பட்டன. உடல்நலம், மனநலம், சுற்றுச் சூழல் வாழ்க்கை வெற்றி எல்லாம் அமைப்பது நமது எண்ணங்களே என்பதை தன் எண்ணங்கள் புத்தகத்தில் வலியுறுத்தியவர். இவருடைய அனைத்து புத்தகங்களும் தூண்டுகோலாக அமைந்து இளைஞர் களுக்கு உந்து சக்தியாக விளங்குகின்றன.

எனது கல்லூரி பருவத்தில் நண்பர்களுடன் சேர்ந்து,உதயமூர்த்தி அவர்களால் உருவாக்கப்பட்ட மக்கள் சக்தி இயக்கத்தில் எங்களை இணைத்து கொண்டு, சாலைகளை தூய்மைப்படுத்தி, வேகத்தடைகள் அமைத்து சீர்ப்படுத்தியது, அரசு பள்ளியை தத்து எடுத்து அதன் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் பொதுவாழ்வில் தூய்மை வேண்டி காந்தி ஜெயந்தி அன்று உண்ணா விரதம் இருந்தது, தூய வளனார் கல்லூரியில் சுய பொருளாதாரம், சமூக விழிப்புணர்வு, சுயக்கட்டுப்பாடு இவற்றை வலியுறுத்தும்படியான கருத்தரங்கம் நடத்தியது.இப்படியான பலவற்றை அவரது நினைவு நாளில் நினைத்து கொள்கிறேன்.

இன்று அவர் நம்முடன் இல்லாவிட்டாலும் அவரது சிந்தனைகளும், எழுத்துகளும் நம்மோடு தான் இருக்கிறது, அவை நம்மை இயக்குகிறது.

…இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top