Close
செப்டம்பர் 20, 2024 4:06 காலை

பணி ஓய்வுபெற்ற உதவியாளரை தனது காரில் வீட்டு அனுப்பி கௌரவித்த புதுக்கோட்டை ஆட்சியர்

புதுக்கோட்டை

ஓய்வு பெற்ற ஊழியரை தனது காரில் வீட்டுக்கு அனுப்பி வைத்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு

பணி ஓய்வுபெற்ற (தபேதார்)  உதவியாளரை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு, தனது காரில் வீட்டு அனுப்பி வைத்து நெகிழ்ச்சியில்  ஆழ்த்தினார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமுவின் தபேதாராக பணியாற்றி வந்தவர் அன்பழகன். இவர் நேற்று முன்தினம்(ஏப்-29) பணி ஓய்வு பெற்றார்.

இவர் பல ஆண்டுகளாக தபேதாராக புதுக்கோட்டையில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் பணி ஓய்வு பெற்ற அவரை  ஆட்சியரின்  முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில்,  ஆட்சியர் கவிதாராமு சால்வை அணிவித்து, சந்தன மாலை அணிவித்தும் கௌரவித்தார்.

அதன்பின்னர் ஓய்வு பெற்ற தபேதார் அன்பழகனை, அவரது வீட்டிற்கு தனது காரில்  வழியனுப்ப தீர்மானித்தார். தனது காரின் கதவை  திறந்து, காரில் முன்பக்கம் தான் அமரும் இருக்கையில் ஓய்வு பெற்ற ஊழியரை  அமர வைத்து கவுரவித்தார். காரின் பின் இருக்கையில் ஆட்சியர் அமர்ந்தார்.

அடப்பன் வயலில் உள்ள வீட்டில் அன்பழகன் இறக்கி விடப்பட்டார். அங்கு அவரது வீட்டில் ஆட்சியர் கவிதா ராமு பரிசு பொருட்கள் வழங்கி, விருந்தில் பங்கேற்றார். அப்போது ஆட்சியரின் கணவர் ராகுலும் உடன் இருந்தார்.

இந்த நிலையில் ஆட்சியரின் காரில் தபேதார் வழியனுப்பி வைக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் நேற்று வைரலானது.  தபேதாரை கலெக்டர் கவுரவித்த நிகழ்வு அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம்  பாராட்டையும், நெகிழ்ச்சியுடன் வரவேற்பையும் பெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top