Close
ஜூலை 4, 2024 4:59 மணி

அதிராமபட்டினத்தில் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த மீனவர்களை மீன்பிடித்தொழில் செய்ய அனுமதிக்க கோரிக்கை

தஞ்சாவூர்

தமிழ்நாடு ஏஐடியூசி மீனவத் தொழிலாளர் சங்கம் சார்பில் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நிர்வாகிகள்

அதிராம்பட்டினம் மீனவ கிராமத்தில் பஞ்சாயத்தாரல் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட நான்கு மீனவர்களை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டுமென தமிழ்நாடு ஏஐடியூசி மீனவத் தொழிலாளர் சங்கம்  வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக  தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப் பட்டுள்ள  மனு விவரம்: தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட் டினம் காந்தி நகர் மீனவ கிராமத்தில் மீனவ பஞ்சாயத்தார்கள் துண்டு பிரசுரத்தின் மூலமாகவும்,கோவில் ஒலிபெருக்கி மூலமாகவும் தேவையற்ற குற்றச்சாட்டுகளை கூறி சமயமுத்து மகன்கள் சேகர், முத்துராமு, நாகூரான் மகன் காளிதாஸ், பாலுசாமி மனைவி சத்யா உள்ளிட்ட நான்கு பேரையும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல கூடாது,மீன் விற்பனை செய்யக்கூடாது என்றும், அதேபோல மேற்கண்ட நால்வரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது, அவர்களுடன் யாரும் பேசக்கூடாது. எந்த பொருளும் கடைகளில் விற்கக் கூடாது. நல்லது கெட்டது போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்லக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சேகர், முத்துராமு ஆகியோர் 4 பேர் சார்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், மீன் பிடிக்க கடலுக்கு செல்லவோ, மீன்கள் விற்பனை செய்யவோ கூடாதென்ற முடிவும், ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் முடிவும் எடுப்பதற்கு அதிராம்பட்டினம் காந்தி நகர் மீனவ பஞ்சாயத்தார்களுக்கு எந்த வித அதிகார மும் இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் வழக்கம் போல் இயங்கலாம் என்று மதுரை உயர்நீதிமன்றம் மீனவர்களுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்த நிலையில், நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு மீனவத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.சின்னத்தம்பி, மாவட்ட செயலாளர் என்.காளிதாஸ், நிர்வாகிகள் முத்துராமு, சேகர், ஏஐடியூசி தஞ்சை மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன் ஆகியோர் இன்று காலை தஞ்சை மாவட்ட ஆட்சியரை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து  மனு அளித்தனர்.

மேலும், மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக அமல்படுத்தவும், பகுதி அரசியல் காரணமாக தீர்ப்பை அமல்படுத்துவதில் சிக்கல் நீடிப்பதால் மாவட்ட ஆட்சியர் நேரடியாக தலையிட்டு, அவரது தலைமையில் அதிகாரிகள், பஞ்சாயத்தார்களை கூட்டி தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தி வந்தனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top