Close
ஜூலை 4, 2024 4:50 மணி

கண்காணிப்பு கேமரா பொருத்துவதில் குழிபிறை முன்மாதிரி ஊராட்சி

புதுக்கோட்டை

திருமயம் ஒன்றியம், குழிபிறை ஊராட்சியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின்  கட்டுப்பாட்டு அறையை திறந்து வைக்கிறார், பொன்னமராவதி காவல்துணை கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான்.

கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதில் குழிபிறை  ஊராட்சி முன்மாதிரியாகத் திகழ்கிறது என்றார்  பொன்னமராவதி கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், குழிபிறை ஊராட்சியில் உள்ள பல்வேறு வீதிகளில் கடந்த 2 ஆண்டு களாக படிப்படியாக இதுவரை மொத்தம் 64 கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.

ஒட்டு மொத்த கண்காணிப்பு கேமராக்களையும் தனி கட்டுப்பாட்டு அறையுடன் ஒருங்கிணைத்து இயக்கி வைக்கும் நிகழ்ச்சி குழிபிறை ஊராட்சித்தலைவர் எஸ். அழகப்பன் தலைமையில் நடைபெற்றது.

இதில் பொன்னமராவதி கோட்ட காவல்துணை கண்காணிப் பாளர் அப்துல்ரகுமான் பங்கேற்று கேமாரக்களின் செயல் பாடுகளை இயக்கி வைத்து மேலும் அவர் பேசியதாவது:

குற்றங்களைத் தடுப்பதற்கும், குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்வதற்கும் சமூக விரோதிகளின் குற்றச் செயல்களைக்கட்டுப்படுத்துவதற்கும் கண்காணிப்பு கேமராக்கள் முக்கியப்பங்காற்றுகின்றன.

இந்த ஊராட்சியில் 64 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதற்கு காவல்துறைசார்பில் பாராட்டுகளையும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். கண்காணிப்பு கேமரா குறித்த விழிப்புணர்வை  குழிபிறை ஊராட்சியைப் போல அனைத்து ஊராட்சிகளும் பெற வேண்டும். ஒவ்வொரு ஊராட்சியிலும் இதைப் போல கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முன் வரவேண்டும்.

பொன்னமராவதி காவல் உள்கோட்டத்துக்குள்பட்ட சுமார் 20 கிராமங்களில் (சிசிடிவி) கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.  அனைத்து கிராமங்களிலும் பொருத்தப்பட வேண்டும் என்பதே காவல்துறையின் குறிக்கோளாகும்.

அவ்வாறு செய்தால் குற்றங்கள் தடுக்கப்படுவதுடன், குற்றவாளிகளும் விரைவில் பிடிபடுவார்கள். இங்கு அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை காலை, மாலை இரவு ஆகிய மூன்று வேளைகளிலும் போலீஸாார்  சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் இருக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளேன் என்றார் அப்துல்ரகுமான்.
பசுமை கூழிபிறை சாரிட்டபிள் டிரஸ்ட் தலைவர் எஸ். ராமசாமி பேசுகையில்,

புதுக்கோட்டை
சிசிடிவி இயக்கம் குறித்து விளக்கமளிக்கிறார், பசுமை கூழிபிறை சாரிட்டபிள் டிரஸ்ட் தலைவர் எஸ். ராமசாமி

கடந்த 2019 டிசம்பரில் இந்த டிரஸ்ட் தொடங்கப்பட்டபோது இங்குள்ள 40, 50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளங்கள், கண்மாய் போன்ற நீர் நிலைகளை தூர்வாரும் பணியை முதலாவதாக  செய்தோம். அதனால், தற்போது இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் சுமார் 200 அடியிலிருந்து 50 அடிக்கு உயர்ந்துள்ளது.

இதைத் தொடர்ந்து மின் வினியோகத்தில் சீரற்ற நிலையால் குறைந்த அழுத்த மின்சாரம் கிடைத்து வந்தது. அனைத்துத்தரப்பினரும் சிரமப்பட்டு வந்தனர். அதை நீக்குவதற்காக பல்வேறு இடங்களில் புதிய மின்மாற்றிகள் நிறுவப்பட்டன. மேலும், இங்கு  புதிய துணை மின்நிலையம் அமைப்பதற்காக தொகுதி அமைச்சர் எஸ். ரகுபதியின் ஒத்துழைப்புடன் விரைவில் பணிகள் தொடங்கவுள்ளது.

அடுத்ததாக ஊரின் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் வகையில் எங்களது டிரஸ்ட் சார்பில் ரூ. 16 லட்சம் செலவில் தற்போது 64 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, தனி கட்டுப்பாட்டு அறையுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்றங்களே நடக்காக ஊராட்சியாக குழிபிறை ஊராட்சி மாறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.
இதில், பனையப்பட்டி காவல்நிலைய ஆய்வாளர் சி. ரவிச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர் ஆர்.விஜயகுமார், பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top