Close
அக்டோபர் 2, 2024 8:39 மணி

பெண் சிசுக்கொலை அதிகரிப்பது வேதனையானது : மதுரை மாவட்ட ஆட்சியர் வேதனை..!

கிராம சபை கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் சங்கீதா

பெண் சிசுக் கொலை நடக்க முதன்மையாகவும், அதற்கு ஆதரவாக இருப்பதே பெண்கள் தான் என்பது வேதனைக்குரிய விஷயம். மதுரையில் பெண் சிசுக் கொலை மீண்டும் அதிகரித்து வருகிறது. உசிலம்பட்டி அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வேதனை தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சேடப்பட்டி ஊராட்சியில் உள்ள சமுதாய கூடத்தில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது.

கூடுதல் மற்றும் பயிற்சி ஆட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்ட இந்த கிராம சபை கூட்டத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வலியுறுத்தி உறுதி மொழி எடுக்கப்பட்டது.

முன்னதாக கிராம சபைக் கூட்டத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா பேசும்போது :-

பெண் குழந்தைகளுக்கு எதிரான அநீதி என்பது பாலியல் ரீதியிலான அநீதி மட்டுமல்ல. பெண் சிசுக் கொலை, பெண் சிசுவை கருவிலேயே அழிப்பதும் தான். மதுரையிலேயே உசிலம்பட்டி பெண் சிசுக் கொலைக்கு பெயர் போனது என்பது உலகம் அறிந்த ஒன்று.

அதைத் தற்போது தடுத்துக் கொண்டு வருகிறோம், ஆனால், மீண்டும் சிசுக்கொலைகள் அதிகமாகி வருவதாக தகவல் வருகிறது. அது நடக்காமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். இது நம் ஒவ்வொரு பெண்களின் கடமை. எல்லா பெண்களுக்கும் இதற்கான பொறுப்புணர்வு உள்ளது.

பெண் சிசுக் கொலை நடக்க முதன்மையாகவும், அதற்கு ஆதரவாகவும் இருப்பதே பெண்கள் தான். பெண்களுக்கு எதிராக பெண்கள் தான் செயல்பட்டு வருகிறார்கள். இப்போது ஆண் பெண் பேதைமை கிடையாது. எல்லா குழந்தைகளும் சமம் தான். சம உரிமை கொடுக்க வேண்டியவர்கள் பெண்களுக்கு எதிரான தீமை செய்யக் கூடாது என, நினைத்தால் சம உரிமையை முதலில் கொடுக்க வேண்டும்.

பெண் சிசுக்கொலை இருக்க கூடாது, பெண் சிசுக்களை கருவிலேயே அழிப்பது இருக்கக் கூடாது. பெண்கள் கிராம சபை கூட்டத்திற்கு ஆர்வமுடன் வந்துள்ளீர்கள். நீங்கள் அனைவரும் நன்கு முன்னேறி உள்ளீர்கள் என்று தெரிகிறது. பெண்கள் முன்னேறினால் மட்டுமே பெண்களுக்கான உரிமையை காப்பாற்றமுடியும்.

பெண் சிசுக்கொலைகளுக்கு எதிராக நீங்கள் போராட வேண்டும். பெண்களுக்கு எதிரானவைகளுக்கு பெண்கள் போராடும்போதுதான் அது வீரியம் பெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் இதற்கான உறுதி மொழியை பெண்கள் எடுக்கிறார்கள். உறுதி மொழி எடுப்பதோடு நின்றுவிடாமல் அதை நடைமுறைப்படுத்த நாம் முனைய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஆட்சியர் பேசினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top