வாடிப்பட்டி:
மதுரை மாவட்டம், பாலமேடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மற்றும் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வேளாண்மை பிரிவு மாணவ- மாணவிகளுக்கு மண்புழு உரம் தயாரிப்பு பற்றிய உள்ளுறை அகப் பயிற்சி முகாம் வாடிப்பட்டி அருகே பாண்டியராஜபுரம் ராசி மற்றும் எஸ் எஸ் மண்புழு உரப்பண்ணைகளில் 10 நாட்கள் நடந்தது.
இந்த பயிற்சி முகாமிற்கு தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.வேளாண்மை ஆசிரியர் முருகேஸ்வரி முன்னிலை வகித்தார். தமிழ் ஆசிரியர் ஜெய்கணேஷ் வரவேற்றார்.
இந்த முகாமில் மண்புழு உர தொழிற்சாலை உரிமையாளர் சரவணன், வேளாண்மை ஆசிரியர் லதாஆகியோர் பயிற்சி யளித்தனர். இதில் உரப்படுக்கை தயாரித்தல், செரிவூட்டப்பட்ட மண் கலவை தயாரித்தல், உரம் சேகரித்தல், ஆட்டு உரம் தயாரித்தல், உரங்கள் சலித்தல், பிரித்தெடுத்தல்,எடை போடுதல், சிப்பமிடுதல், பஞ்சகாவியம் தயாரித்தல், ஹியூமிக் அமிலம் தயாரித்தல் உள்ளிட்டவை பற்றி பயிற்சியளிக்கப்பட்டது. முடிவில் வேளாண்மை பயிற்றுனர் நந்தினி நன்றி கூறினார்.