Close
ஏப்ரல் 3, 2025 1:47 காலை

தீபத்திருவிழா: திருவண்ணாமலையில் ஸ்ரீபிடாரியம்மன் உற்சவம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா புதன்கிழமை (டிச.4) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

கொடியேற்றத்திற்கு முந்தைய மூன்று நாட்கள் காவல் தெய்வ உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கும். அதன்படி நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை  இரவு திருவண்ணாமலை சின்னக் கடைத் தெருவில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் துர்க்கை அம்மன் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.

தீபத் திருவிழாவையொட்டி, காவல் தெய்வங்களின் 2-ஆவது நாள் வழிபாடான ஸ்ரீபிடாரியம்மன் உற்சவம் கோலாகலமாக நேற்று இரவு நடைபெற்றது.

இதையொட்டி, அருணாசலேஸ்வரா் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள ஸ்ரீபிடாரியம்மன் சந்நிதியில் மூலவருக்கு பால், பழம், சந்தனம், பன்னீா் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.

பிறகு, மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து இரவு 9 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவா் பிடாரியம்மன், அருணாசலேஸ்வரா் கோயில் மூன்றாம் பிரகாரம் மற்றும் மாட வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாள் தரிசனம் செய்தனர்.

இன்று ஸ்ரீவிநாயகா் வழிபாடு:

காவல் தெய்வங்களின் 3-ஆவது நாள் வழிபாடு இன்று செவ்வாய்க்கிழமை இரவு அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெறுகிறது.

கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள ஸ்ரீசம்பந்த விநாயகா் சந்நிதியில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் செய்யப்படுகிறது. பிறகு, உற்சவா் மாட வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். காவல் தெய்வங்களின் வழிபாடு இன்று செவ்வாய்க்கிழமை  இரவுடன் நிறைவு பெறுகிறது.

தீபத் திருவிழா கொடியேற்றம்:

டிசம்பா் 4-ஆம் தேதி காலை 6 மணிக்கு மேல் காலை 7.25 மணிக்குள் அருணாசலேஸ்வரர் சன்னதியில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறும். அருணாசலேஸ்வரா் கோயில் மூலவா் சந்நிதி எதிரே உள்ள 62 அடி உயர தங்கக் கொடிமரத்தில் தீபத் திருவிழாவுக்கான கொடியை சிவாச்சாரியா்கள் ஏற்றுகின்றனா்..

கார்த்திகை தீபத் திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான தீப தரிசன நாளான 13ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபம் ஏற்றப்படும்.

மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசன மண்டபத்தில் எழுந்தருள, ஆண்டுக்கு 5 நிமிடம் மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த தாண்டவம் ஆடியபடி வந்த பின்பு 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் அறங்காவலர் குழுவினர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் பிடாரியம்மன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top