நாமக்கல்:
நாமக்கல் நகரில் இருந்து 6 வழித்தடங்களில் பெண்களுக்கான கூடுதல் இலவச டவுன் பஸ் வசதியை, ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார்.
நாமக்கல் நகரில் உள்ள பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, ப.வேலூர், ராசிபுரம், காட்டுப்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு போக்குவரத்துக் கழக எல்எஸ்எஸ் டவுன் பவுஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.
இந்த பஸ்கள் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நின்றும் செல்லும், மேலும், தமிழக அரசு அறிவித்துள்ள பெண்களுக்கு கட்டணமில்லா சேவை இந்த பஸ்களில் வழங்கப்பட மாட்டாது. இதில் பயணம் செய்யும் பெணகள் பணம் செலுத்தி டிக்கட் பெற வேண்டும். இந்த நிலையில் இந்த பஸ்களை தமிழக அரசின் விடியல் பயணம் திட்டத்தின் கீழ், பெண்களுக்கு இலவசமாக இயக்க வேண்டும் என நாமக்கல் ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார், தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதைத்தொடர்ந்து, 6 பஸ்களையும் எல்எஸ்எஸ் டவுன் பஸ் என்பதை மாற்றி, சாதாரண விடியல் பயணம் டவுன் பஸ்களாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து புதிய விடியல் பயண டவுன்பஸ்கள் துவக்க விழா, நாமக்கல் கலெக்டர் உமா தலைமையில் நடைபெற்றது.
எம்எல்ஏக்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி, நாமக்கல் மாநகர மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர், ராஜேஷ்குமார் எம்.பி., விழாவில் கலந்துகொண்டு விடியல் பயண டவுன் பஸகளை துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு சாதாரண அரசு டவுன் பஸ்களில் மகளிர் விடியல் பயணத்திட்டம் கடந்த மே 7ம் தேதி முதல் துவக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் அரசு டவுன் பஸ்களில் சுமார் 72 சதவிகிதம் பெண்கள் கட்டணமின்றி பயணம் மேற்கொண்டுள்ளனர்.
மேலும், அரசு டவுன் பஸ்களில் மகளிர் விடியல் பயணத் திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு 124 டவுன் பஸ்களில், 1,70,027 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த 124 டவுன் பஸ்களுடன் கூடுதலாக 6 பஸ்கள் சேர்த்து மொத்தம் 130 டவுன் பஸ்கள் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்துகளாக இயக்கப்பட உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் இன்றியமையாத தொழில் கோழிப்பண்ணை தொழில் ஆகும். நாமக்கல் மாவட்டத்திலிருந்து வளைகுடா நாடுகளுக்கு கோழி முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கத்தார் நாட்டில் முட்டை இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
தமிழக முதல்வர் அனுமதியுடன் தற்போது மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்திடம் கத்தார் நாட்டில் முட்டை இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுபாடுகளை தளர்வு செய்திட கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு முட்டை ஏற்றுமதி வழக்கம்போல் மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாநகர துணை மேயர் பூபதி, கமிஷனர் மகேஸ்வரி, அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் செங்கோட்டுவேலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.