நாமக்கல்:
டிஎன்பிஎஸ்சி குரூப்2, குரூப் 2ஏ தேர்வுக்கு, நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமா, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) முதல்நிலைத் தேர்வு கடந்த செப். 14ம் தேதி நடத்தப்பட்டது. இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த டிச. 12ம் தேதி வெளியானது. அத்தேர்வில் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயின்ற மாணவர்கள் 24 நபர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து தற்பொழுது டிஎன்பிஎஸ்சி மூலம் குரூப் 2, குரூப் 2ஏ போட்டித்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின் படி முதன்மை தேர்விற்கான Test Batch – CBT நேரடியாக, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் வருகிற 23ம் தேதி திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை, காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு பாடவாரியாக சிறந்த வல்லுநர்களை கொண்டு தயாரிக்கப்பட்ட வினாக்கள் மூலம் மாதிரித்தேர்வுகள் நடத்தப்படவுள்ளது. மேலும் மாநில அளவிலான மாதிரித்தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களின் விவரத்தினை 04286-222260 என்ற தொலைபேசி மூலமோ அல்லது onlineclassnkl@gmail.com .காம் என்ற இ-மெயில் மூலமாகாவே அல்லது நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை நேரில் தொடர்பு கொண்டோ தங்களது பெயரை பதிவு செய்து பயன்பெறலாம்.
இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மனுதாரர்கள் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் கொண்டு வரவேண்டும்.
நாமக்கல் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயின்ற மாணவர்கள், 2023 – 2024 ஆம் ஆண்டு வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 22 பேரும், சீருடைப்பணியாளர் எஸ்.ஐ. தேர்வில் 5 பேரும், சீருடைப்பணியாளர் போலீஸ் தேர்வில் 13 பேரும் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.