நாமக்கல்:
ஆஸ்கார் விருதுக்காக, வசனம் இல்லாமல் தயாரிக்கப்பட்ட குறும்படம் வெளியீட்டு விழா நாமக்கல்லில் நடைபெற்றது.
நாமக்கல் நகரைச்சேர்ந்த ஆர்.எஸ்.ஜி பிக்ச்சர்ஸ் நிறுவனம் சார்பாக, நடிகர் கோபிகாந்தி டைரக்ஷன் செய்து டொனேட் என்ற விழிப்புணர்வு குறும்படத்தை தயாரித்துள்ளார்.
ஆஸ்கார் விருதுக்காக தயாரிக்கப்பட்டுள்ள அந்த படத்தில் வசனம் இல்லாமல் காட்சிகளைக்கொண்டு, பின்னணி இசையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில் நடைபெற்ற விழாவில், டொனேட் என்ற குறும் படத்தை, அதன் இயக்குனர் கோபிகாந்தி வெளியிட்டார்.
பின்னர் அவர் கூறியதாவது:
ஒரு பிச்சைக்காரனுக்கும், பணக்கார குழந்தைக்கும் உள்ள உணர்வுபூர்வமான பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக அனைத்து மொழியினரும் பார்க்கும் வகையில் வசனம் இல்லாமல் காட்சி அமைப்பின் மூலமாக டொனேட் என்ற படத்தை உருவாக்கியுள்ளேன்.
பிச்சைக்கார கதாபத்திரத்தில் முனிதேவன் என்கிற புதுமுக நடிகரை அறிமுகப்படுத்தி உள்ளேன். மேலும் விஜய் முருகன், திவ்யா, பிரதாப் சிங் உள்ளிட்ட புதுமுக கலைஞர்களுடன் ஸ்ரீ வாணிஸ்ரீ, சுஜித், கோகுல்ராஜ், மணிகண்டன் போன்ற குழந்தை நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளராக குமரன்ஜி, படத் தொகுப்பாளராக ராம்நாத், இசையமைப்பாளராக கோபால் கிருஷ்ணன் ஆகியோர் பணிபுரிந்து உள்ளனர். ஆஸ்கார் விருதுக்காக 18 நிமிடம் மட்டுமே ஓடும் வகையில் குறும்படமாக தயாரிக்கப்பட்டுளள்ளது.
தற்போது யு டியூப் சேனலில் அனைவரும் பார்க்கலாம். அமேசான், நெட்பிலிக்ஸ் போன்ற ஒடிடி தளங்களில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளேன். இப்படத்தை அமெரிக்காவில் நடைபெற்றுவரும் 97வது ஆஸ்கார் விருது போட்டி தேர்வுக்கு அனுப்பியுள்ளேன்.
மேலும் நார்வே, கேன்ஸ், பிரான்ஸ், பெர்லின் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற உள்ள திரைப்பட விழாக்களுக்கு, விழிப்புணர்வு படத்திற்கான விருது பிரிவின் கீழ், டொனேட் படத்தை அனுப்ப உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.