நாமக்கல் மாவட்டத்தில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு பணிக்காக, 86 தேர்வு மையங்களுக்கு, 1,260 அறை கண்காணிப்பாளர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில், பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு, வரும் மார்ச் 3ல் தொடங்கி, ஏப்ரல் 15ம் தேதி வரை நடக்கிறது. பிளஸ் 2 தேர்வை, 86 மையங்களில், 9,157 மாணவர்கள், 9,304 மாணவியர் என, மொத்தம் 18,461 பேர் எழுதுகின்றனர்.
பிளஸ் 1 பொதுத்தேர்வு, 86 மையங்களில் நடைபெற உள்ளது. அதில் 9,372 மாணவர்கள், 9,594 மாணவியர் என மொத்தம் 18,966 பேர் பங்கேற்கின்றனர். பிளஸ் 1, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுக்கு, 86 முதன்மை கண்காணிப்பாளர்கள், 86 துறை அலுவலர்கள், 4 கூடுதல் துறை அலுவலர்கள், 200 பறக்கும் படை அலுவலர்கள், 24 வழித்தட அலுவலர்கள், 24 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் மற்றும் தேர்வு அறைக்கண்காணிப்பாளர்கள் 1,260 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வு மையங்களுக்கு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்கப் பட்டுள்ளனர். ஒரு மையத்துக்கு ஒரு முதன்மை கண்காணிப்பளார்கள் வீதம் 86 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுவதை கண்காணிக்க, தேர்வு பணியில் ஈடுபடும் அறை கண்காணிப்பாளர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் நிகழ்ச்சி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார். மாவட்டத்தில் உள்ள 86 தேர்வு மையங்களுக்கு, 1,260 அறை கண்காணிப்பாளர்கள் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். ஆசிரியர்கள் பணியாற்றும் அதே ஒன்றியத்துக்குள், வெவ்வேறு தேர்வு மையங்களுக்கு இந்த குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகள், அந்த பள்ளியின் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதும் மையங்களில் தவிர்த்து, பிற மையங்களில் ஆசிரியர்களுக்கு தேர்வு பணி ஒதுக்கப்பட்டுள்ளது.