உசிலம்பட்டி அருகே போலியான சான்று வழங்க கோரி கிராம நிர்வாக அலுவலரை தாக்க முற்பட்டு மிரட்டிய பார்வட் ப்ளாக் நிர்வாகியின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, பொட்டுலுபட்டி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் கோடாங்கி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த கவாஸ்கர்.
இவரிடம், கர்நாடக மாநிலத்தில் வசித்து வரும் லெட்சுமி என்பவரும், பொட்டுலுபட்டி கிராம ஊராட்சிக்குட்பட்ட பாப்பம்பட்டியில் வசித்து வரும் புஷ்பம் என்பவரும் ஒருவரே என்ற ஒற்றைச் சான்றை போலியான சான்றாக வழங்க பொட்டுலுபட்டியைச் சேர்ந்த பார்வட் ப்ளாக் நிர்வாகி ஆதிசேடன் என்பவர் கோரிக்கை வைத்தாக கூறப்படுகிறது.
அதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் ஒற்றை சான்று வழங்க தனக்கு அதிகாரம் இல்லை என்றும், சட்டப்படி வழங்க முடியாது என கிராம நிர்வாக அலுவலர் கூறியுள்ளார்.
இதனையடுத்து உன்னை அடித்தாலும் சட்டப்படி குற்றம் தானே> நான் பார்த்துக் கொள்கிறேன் எனக் கூறி பார்வட் ப்ளாக் நிர்வாகி தாக்க முற்பட்டு மிரட்டியுள்ளார்.
இதை தனது செல்போனில் பதிவு செய்த கிராம நிர்வாக அலுவலர் கவாஸ்கர், இந்த சம்பவம் தொடர்பாக உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் வீடியோ ஆதாரத்துடன் புகார் மனு அளித்தார்.
இந்த புகாரின் பேரில், காவல்துறையினர்தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலியான சான்று வழங்க கோரி கிராம நிர்வாக அலுவலரை பார்வட் ப்ளாக் நிர்வாகி தாக்க முற்பட்டு மிரட்டும் காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.