காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி 7 ஆம் திருநாள் நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் லட்சுமி,சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மகாசக்தி பீடங்களில் ஒன்றாக இருந்து வருவது காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில்.இக்கோயில் வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி நிகழ் மாதம் 3 ஆம் தேதி திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து தினசரி காலையிலும், மாலையிலும் உற்சவர் காமாட்சி வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி ராஜ வீதிகளில் வீதியுலா வந்தார். விழாவின் 7 ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை காலையில் தேரோட்டம் நடைபெற்றது.
தேரில் லட்சுமி,சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி பவனி வந்து சங்கரமடம் அருகில் வந்து தங்கினார்.
சங்கரமட நுழைவுவாயிலில் காமாட்சி அம்பிகைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. புல்லாங்குழல் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.வாணவேடிக்கைகளும் நடைபெற்றன. மாலையில் மீண்டும் தேரானது புறப்பட்டு ஆலயம் வந்து சேர்ந்தது.
திங்கள்கிழமை காலையில் அம்மன் பத்ரபீடத்திலும், மாலையில் குதிரை வாகனத்திலும் வீதியுலா வருகிறார். மார்ச் 11 ஆம் தேதி இரவு வெள்ளித் தேரில் அம்மன் வீதியுலா வருகிறார்.மார்ச்.14 ஆம் தேதி அதிகாலையில் விஸ்வரூப தரிசனக் காட்சியும் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை கோயில்ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயர்,செயல் அலுவலர் ஆர்.ராஜ லட்சுமி மற்றும் கோயில் ஸ்தானீகர்கள் செய்து வருகின்றனர்.