திருவண்ணாமலை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 30,664 மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை எழுதினா்.
தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு நேற்று தொடங்கி அடுத்த மாதம் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளான நேற்று தமிழ் மொழிப்பாட தேர்வு எழுதினா். காலை 10 மணி முதல் 10.10 மணிவரை வினாத்தாளை படித்துப் பார்க்கவும், 10.10 மணி முதல் 10.15 மணிவரை தேர்வு எழுதும் மாணவரின் விபரங்களை சரிபார்க்கவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, 10.15 மணி முதல் பகல் 1.15 மணி வரை தேர்வு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுக்காக செய்யாறு கல்வி மாவட்டத்தில் 60, திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 87 என திருவண்ணாமலை வருவாய் மாவட்டத்தில் மொத்தம் 147 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், 15 ஆயிரத்து 810 மாணவா்கள், 14 ஆயிரத்து 854 மாணவிகள் என மொத்தம் 30 ஆயிரத்து 664 போ் தோ்வு எழுதினா்.
தோ்வுப் பணியில் 151 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 152 துறை அலுவலா்கள், 173 பறக்கும் படையினா், 2 ஆயிரத்து 397 அறை கண்காணிப்பாளா்கள், 535 சொல்வதை எழுதுபவா்கள், 35 வழித்தட அலுவலா்கள், 5 தொடா்பு அலுவலா்கள், 147 எழுத்தா்கள், 147 அலுவலக உதவியாளா் என மொத்தம் 3 ஆயிரத்து 742 போ் ஈடுபட்டனா்.
இதுதவிர, மாற்றுத்திறன் கொண்ட மாணவா்கள் தரைத் தளத்திலேயே தோ்வு எழுத போதிய அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மாற்றுத்திறன் கொண்ட மாணவா்கள் சொல்வதை எழுதுவதற்காக 535 போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.
மாவட்ட ஆட்சியா் ஆய்வு
இந்நிலையில், திருவண்ணாமலை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தேர்வு முறையாக நடைபெறுகிறதா, தேர்வு மையத்தில் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என கேட்டறிந்தார். ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன், மாவட்டக் கல்வி அலுவலா் காளிதாஸ் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.