உத்திரமேரூர் அருகே சாலவாக்கத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட 100 நாள் பணியாளர்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவை தொகையை விடுவிக்க கோரி சாலவாக்கம் ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் பங்கேற்று மத்திய அரசு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட 100 நாள் பணியாளர்களுக்கு கடந்த நான்கு மாதத்திற்கும் மேலாக மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவை தொகை இதுவரையில் வழங்காமல் மத்திய அரசு இருந்து வருகிறது.
இதனால், இல்லத்தரசிகள் குடும்பம் நடத்துவதற்கு கையில் பணம் இல்லாமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
நூறு நாள் வேலை திட்ட பணியாளர்களின் நிலுவை தொகை விடுவிக்க கோரி தமிழக அரசு மத்திய அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் இன்னும் நூறு நாள் வேலை பணியாளர்களின் நிலுவை தொகையை மத்திய அரசு விடுவிக்காமல் இருந்து வருகிறது.
அதைத்தொடர்ந்து திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களின் நிலுவை தொகையை விடுவிக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாலவாக்கம் கிராமத்தில் சாலவாக்கம் ஒன்றிய திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிய செயலாளர் டி.குமார் தலைமையிலும், ஊராட்சி மன்ற தலைவர் சத்யா சக்திவேல், இந்து சமய மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் எஸ்.ஆர்.வெங்கடேசன் முன்னிலையிலும் நடைபெற்றது.
இதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க. சுந்தர் பங்கேற்று நூறு நாள் வேலை திட்ட பணியாளர்களின் நிலுவை தொகையை விடுவிக்க கோரி மத்திய அரசு எதிராக 100 நாள் பணியாளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகளுடன் இணைந்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நூறு நாள் வேலை திட்ட பணியாளர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.