Close
மே 17, 2025 10:59 மணி

திருவண்ணாமலையில் கருணை காட்டிய வருண பகவான்..! மாரி வழங்கிய வள்ளல்..!

கொட்டித்தீர்த்த மழை

அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் திருவண்ணாமலையில் நேற்று மாலை கரு மேகங்கள் சூழ்ந்து திடீர் மழை பெய்ததால் திருவண்ணாமலை மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழ்நாட்டில் கோடையின் தாக்கம் வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வழக்கத்தைவிட அதிகரிப்பது வழக்கம். இந்த ஆண்டு கோடை வெயில் மார்ச் முதல் வாரத்திலேயே தொடங்கியது. 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்தது.

மேலும், எதிர்பாராத கோடை மழை பெய்தாலும், இயற்கையின் சமநிலையற்ற தன்மை காரணமாக இந்த ஆண்டு வழக்கம் போல வெயிலின் பாதிப்பு கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வு அறிக்கை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு, கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. 4ம் தேதி முதல் வரும் 29ம் தேதி வரை அக்னி நட்சத்திர காலமாகும். அதில், முதல் 15 நாட்களுக்கு வெயில் அதிகமாகவும், பின்னர் படிப்படியாக குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. முற்பகல் 11 மணிக்கெல்லாம் வாகனங்களை ஓட்ட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வந்தது.

இந்த நிலையில், அக்னி நட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. எனவே, வெயிலுக்குப் பயந்து பொதுமக்கள் பலா் வீடுகளிலேயே முடங்கினா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு திடீரென லேசான மழை பெய்யத் தொடங்கியது. சிறிது நேரத்தில் திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஆட்சியா் அலுவலகம், அடி அண்ணாமலை, அத்தியந்தல், தென்மாத்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது.

ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் கழிவுநீருடன் சோ்ந்து மழை நீரும் தேங்கியதால் பயணிகள் அவதிப்பட்டனா். அனல் காற்று வீசுவது குறைந்து குளிா் காற்று வீசியது. நீண்ட நாள்களுக்குப் பிறகு பெய்த பலத்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top