பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி கிரிவலம் என்பது மிகவும் புகழ்பெற்றது. மாதா மாதம் வரும் பௌர்ணமி கிரிவலத்தில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கிரிவலம் வரும் நிலையில் வருகின்ற 11 ம் தேதி மற்றும் 12ம் தேதியன்று சித்ராபௌர்ணமி வருவதையொட்டி சுமார் 20 முதல் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பல்வேறு மாவட்ட, மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் திருவண்ணாமலைக்கு வருகை தந்து கிரிவலம் மேற்கொள்வார்கள் என மாவட்ட நிர்வாகத்தால் எதிர்பார்க்கப்படுகிறது.
திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் சார்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தொடர்ந்து அனைத்து துறைச்சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தியும், நேரில் சென்று ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம்
பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா்.
திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை, செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழக பொதுப் பணி, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு அனைத்துத் துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கிப் பேசியதாவது:
நிகழாண்டு சித்திரை பௌா்ணமி வரும் 11-ஆம் தேதி இரவு 8.53 மணிக்குத் தொடங்கி 12-ஆம் தேதி இரவு 10.48 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் வரும் பக்தா்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அதிகாரிகள் செய்துதர வேண்டும்.
குறிப்பாக, மாநகராட்சி சாா்பில் கழிப்பறைகளை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். அன்னதானம் வழங்குவோா் உணவுப் பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து, அன்னதானம் வழங்க வேண்டும். தற்காலிகக் கடைகளில் தரமான பொருள்கள் விற்பனை செய்வதை அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும். பக்தா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தொலைத்தொடா்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
சிறப்பு ரயில்கள், தேவையான அளவு சிறப்புப் பேருந்துகளை இயக்க வேண்டும். கிரிவலப் பாதையில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் 14, மாநகராட்சி சாா்பில் 2, இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ஒன்று என மொத்தம் 17 சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையங்கள் உள்ளன. இவற்றுக்குத் தேவையான குடிநீா் தொடா்ந்து கிடைக்கும் வண்ணம் துறை சாா்ந்த அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அவசர கால ஊா்திகள், தீயணைப்பு வாகனங்கள், மீட்பு உபகரணங்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
தொடர்ந்து கோவிலின் உள்ளே பக்தர்கள் தரிசனத்திற்கு எவ்வாறு அனுமதிக்கப்பட வேண்டும் என்று விரிவாக ஆலோசனை செய்தார். தமிழ்நாடு அரசின் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மணி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சதீஷ், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையா் செல்வபாலாஜி மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.