திருவண்ணாமலையில் சித்திரை பௌர்ணமி விழா நாட்களில் ஆட்டோ வாகனங்களில் வசூலிக்க வேண்டிய கட்டண விபரம் மற்றும் ஓட்டுநர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து திருமண மண்டபத்தில் ஆட்டோ ஓட்டுநர்களிடையே ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரமேஷ், தலைமை தாங்கினார். தொழிற்சங்க பிரதிநிதியும், திருவண்ணாமலை மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்அணி அமைப்பாளரும் மாவட்ட கண்காணிப்புக் குழு உறுப்பினருமான ஆறுமுகம் முன்னிலை வகித்தார். போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சக்திவேல் அனைவரையும் வரவேற்று பேசினார். ஆட்டோ ஓட்டுநர்கள், சங்க நிர்வாகிகள் மற்றும் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டத்தை வட்டார போக்குவரத்து அலுவலர் கருணாநிதி தொடக்கிவைத்து பேசினார்.
சென்ற ஆண்டு சித்ரா பௌர்ணமி விழா திருவண்ணாமலை மாவட்டத்தில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதில் திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலின்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தார்கள். அதை பாராட்டும் விதமாக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சர் எ.வ.வேலு அனைத்து அரசு அதிகாரிகளையும் பாராட்டி மகிழ்ந்தார்.
அதேபோல் இந்த வருடம் சித்ரா பௌர்ணமி விழாவின் போது அரசு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டும் வசூலிக்க வேண்டும். பக்தர்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் ஆட்டோ பறிமுதல் செய்யப்படும்.
வட்டார போக்குவரத்து அலுவலரின் அனுமதி பெற்ற கியூஆர் கோடு உள்ள ஆட்டோக்கள் மட்டும் இயக்கப்பட வேண்டும், ஆட்டோ பயணிகளிடம் ஓட்டுநர்கள் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்,
சந்தேகப்படும்படியான நபர்களோ பொருள்களோ கண்டறியப்பட்டால் காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும், ஓட்டுநர்கள் சீருடையில் இருக்க வேண்டும். மற்றும் பெயர் வில்லை அணிய வேண்டும்.
ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் நடப்பில் இருக்க வேண்டும். வாகனங்களில் மருந்துகளுடன் கூடிய முதலுதவி பெட்டி வைத்திருக்க வேண்டும்.
ஆட்டோ செல்லும் வழித்தடம்
புறவழிச்சாலை அத்தியந்தல் தற்காலிக பேருந்து நிலையம் முதல் கலைஞர் கருணாநிதி அரசு கலை கல்லூரி மைதானம் வரை ,
பெரும்பாக்கம் புறவழிச்சாலை, அத்தியந்தல் தற்காலிக பேருந்து நிலையம் முதல் அங்காளம்மன் கோயில் வரை,
புறவழிச்சாலை தண்டராம்பட்டு ரோடு, திருக்கோயிலூர் ரோடு முதல் அத்தியந்தல் வரை
புறவழிச்சாலை பெரும்பாக்கம், வேட்டவலம் தற்காலிக பேருந்து நிலையம் முதல் திருக்கோவிலூர் தற்காலிக பேருந்து நிலையம் வரை,
திருக்கோவிலூர் தற்காலிக பேருந்து நிலையம் முதல் அங்காளம்மன்கோயில் வரை
தண்டராம்பட்டு ரோடு, மணலூர் பேட்டை சாலை முதல் அங்காளம்மன்கோயில் வரை
தண்டராம்பட்டு ரோடு, கலைஞர் கருணாநிதி அரசு கலை கல்லூரி முதல் அங்காளம்மன் கோயில் வரை
தண்டராம்பட்டு ரோடு, திண்டிவனம் ரோடு தற்காலிக பேருந்து நிலையம் முதல் திருவள்ளுவர் சிலை வரை
திருக்கோயிலூர் ரோடு திண்டிவனம் ரோடு தற்காலிக பேருந்து நிலையம் முதல் காந்தி நகர் பைபாஸ் ரோடு 6வது குறுக்கு தெரு வரை
நல்லவன்பாளையம் முதல் அங்காளபரமேஸ்வரி கோவில் வரை
தண்டராம்பட்டு ரோடு, பச்சையம்மன்கோயில் முதல் கிருஷ்ணா லாட்ஜ் வரை சங்கு ஊதும் இடம் ஆகிய ஒதுக்கப்பட்ட இடங்களில் ஆட்டோக்களை நிறுத்தி பக்தர்கள், பொதுமக்களை அழைத்துச் செல்லவேண்டும்.
நபர் ஒன்றுக்கு ரூ.30/-மட்டும் வசூலிக்க வேண்டும் என பேசினார்.
முன்னதாக சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் கலந்து கொண்டு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் , மாநகரத்துக்கு வருகை தரும் ஆன்மீக பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் நடந்துகொள்ளவேண்டுமென பேசினார்.
கூட்டத்தில் ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சிவக்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர்கள், சிஐடியு ஆட்டோ சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.