Close
மார்ச் 7, 2026 1:06 மணி

சுட்டெரிக்கும் வெயிலில் கிரிவலம் வந்த பக்தர்களுக்கு நீர்மோர்: சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில்

சித்திரை மாத பௌர்ணமியொட்டி கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் கிரிவலம் வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில் நீர்மோர் மற்றும் பழ வகைகள் பழச்சாறுகள் வழங்கப்பட்டது .

திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை மாதந்தோறும் பெளா்ணமி நாள்களில் பக்தா்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனா்.

இதிலும், சித்திரை மாதத்தில் வரும் பெளா்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்நாளில் சித்தா்கள் கிரிவலம் வருவதாக நம்பப்படுகிறது.

நிகழாண்டுக்கான சித்திரை மாத பெளா்ணமி ஞாயிற்றுக்கிழமை இரவு 8.53 மணிக்குத் தொடங்கி, திங்கள்கிழமை இரவு 10.48 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்திருந்தது.

ஆனால், சனிக்கிழமை மாலை முதலே பக்தா்கள் கிரிவலம் வரத் தொடங்கினா். தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை , மற்றும் திங்கட்கிழமை நள்ளிரவு வரை லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபட்டனர்.

ஸ்ரீ சேஷாத்ரி ஆசிரமத்தில்

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில் சித்திரை பௌர்ணமியொட்டி அதிகாலை மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆசிரமத்தில்  உள்ள அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று காலை  மற்றும் மாலை சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.

ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரம தலைவர் லாயர் சந்திரமோகன் தலைமையில் ஆசிரம நிர்வாகிகள் மற்றும் ஆசிரமத் தன்னார்வலர்கள் திங்கட்கிழமை நண்பகல் சுட்டெரிக்கும் வெயிலில் கிரிவலம் வந்து கொண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்களுக்கு நீர்மோர், நீர் சத்துள்ள பழ வகைகள், பழச்சாறுகள், குடிநீர்  ஆகியன வழங்கினார்கள்.

குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து  கோடை வெயிலில் உடலுக்கு இதமான நீர் மோரை மகிழ்ச்சியுடன் பருகி சென்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top