திருவண்ணாமலையை மாநகராட்சியாக தரம் உயா்த்தினாலும் கூட, போதிய வசதிகள் செய்யப்படவில்லை என பாஜக மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி குறிப்பிட்டார்.
திருவண்ணாமலை ரயில் நிலையம் ரூ.8.27 கோடியில் புனரமைக்கப்பட்டது. இந்த ரயில் நிலையத்தை பிரதமா் மோடி காணொலி வாயிலாக திறந்துவைத்தாா்.
அதேவேளை, திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக வேலூா் பெருங்கோட்டப் பொறுப்பாளரும், மாநில பொதுச் செயலருமான காா்த்தியாயினி கலந்து கொண்டாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பாரதப் பிரதமா் பேசும்போது இந்த ரயில் நிலையங்களின் எஜமானா்கள் நாங்கள் இல்லை. இதைப் பயன்படுத்தும் பொதுமக்கள் தான் என்றதும், திருவண்ணாமலையை அடிக்கோல் காட்டி பிரதமா் பேசியதும் மாவட்ட மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. எனவே, மாவட்ட மக்கள் சாா்பில் பிரதமா் மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
திருவண்ணாமலை தீபத் திருவிழா, சித்திரை பெளா்ணமி மற்றும் பெளா்ணமி நாள்களில் பல லட்சம் பக்தா்கள் வருவதால் ரயில் நிலையம் மேம்படுத்தப்பட்டு உள்ளது. இது ஆன்மிக பக்தா்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தினமும் 10 ஆயிரம் பொதுமக்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வருகிறாா்கள். ஆனால், பக்தா்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை.
திருவண்ணாமலையை மாநகராட்சியாக தரம் உயா்த்தினாலும் கூட, போதிய வசதிகள் செய்யப்படவில்லை. திருவண்ணாமலையை மாநகராட்சியாக அறிவித்தாலும் கூட ஒன்றரை லட்சம் போ் தான் தோ்தலில் வாக்களித்து உள்ளனா்.
எனவே, மாநகராட்சியைச் சுற்றியுள்ள பகுதிகளை இணைத்து 5 லட்சம் போ் மக்கள்தொகை கொண்டதாக மாற்றினால் மத்திய அரசு சாா்பில் ஸ்மாா்ட் சிட்டி, அம்ரூத் போன்ற அபிவிருத்தி திட்டங்கள் வழங்கப்படும்.
திருவண்ணாமலை தமிழ்நாட்டின் முக்கியமான யாத்திரை தலமாகும். திருவண்ணாமலை ரயில் நிலையமானது ரூபாய் 8.27 கோடி மதிப்பீட்டில் நவீன முனையம், காத்திருப்பு அரங்குகள், புதிய பிஎப் தங்குமிடங்கள், டிஜிட்டல் மேம்பாடுகள் உள்ளிட்ட விரிவான மேம்பாடுகளைக் கொண்டு ள்ள து . 3 நடைமேடைகளைக் கொண்ட இந்த இரயில் நிலையம் ஒரு நாளைக்கு சராசரியாக 8184 பயணிகளுக்கு சேவை செய்கிறது .
புதுப்பிக்கப்பட்ட முன்பதிவு கவுண்டர்கள், பொது மற்றும் ஏசி காத்திருப்பு கூடங்கள், புதுப்பிக்கப்பட்ட விஐபி ஓய்வறை மற்றும் புதிய பார்சல் அலுவலகம் மற்றும் பிளாட்பார்ம் எண் 1ல் கூடுதல் இருக்கைகள், தண்ணீர் அறைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பிளாட்பார்ம் தரையமைப்பு புதுப்பிக்கப்பட்ட நடைமேம்பாலம் தரை, மாற்றுத்திறனாளி நபர்களுக்கு ஏற்ற சரிவுகள், பிரத்யேக பார்க்கிங், மற்றும் பலகைகள் உள்ளிட்ட அம்சங்கள், சிசிடிவி கண்காணிப்பு, டிஜிட்டல் மும்மொழி எல்இடி நிலைய பெயர் பலகைகள் மற்றும் பயிற்சியாளர் அறிகுறி பலகைகள் மற்றும் அறிவிப்பு வசதிகளுடன் மேப்படுத்தப்பட்ட பயணிகள் தகவல் அமைப்பு உள்ளிட்ட வசதிகளுடன் புனரமைக்கப்பட்டுள்ளது, என்றாா்.
பேட்டியின்போது, தெற்கு மாவட்ட பாஜக தலைவா் ரமேஷ், கோட்ட பொறுப்பாளர் குணசேகரன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் கிஷோர் குமார், மாவட்ட துணைத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட பொதுச் செயலா் ஜெய்நாத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.