Close
மே 31, 2025 9:04 மணி

“உழவரைத் தேடி – வேளாண்மை உழவர் நலத்துறை” திட்ட தொடக்க விழா

விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியா்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் அரசு செயல்படுத்தும் அத்தனை திட்டங்களையும் முறையாக பயன்படுத்தி தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என உழவரைத் தேடி, வேளாண்மை உழவர் நலத்துறை திட்ட துவக்க விழாவில் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் , கூறினார்.

தமிழக வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில், ‘உழவரைத் தேடி-வேளாண்மை உழவா் நலத்துறை’ என்ற திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.

இந்தத் திட்டத்தை சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

இந்தத் திட்டத்தின் தொடக்க விழா நிகழ்ச்சி, திருவண்ணாமலையை அடுத்த நல்லான்பிள்ளைபெற்றாள் ஊராட்சி மற்றும் ஆரணியை அடுத்து புங்கம்பாடி கிராமத்தில் நடைபெற்றது.

நல்லான்பிள்ளைபெற்றாள் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

இந்தத் திட்டத்தின் நோக்கம் வேளாண்துறை சாா்ந்த அலுவலா்கள் கிராமங்களில் முகாமிட்டு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது. மேலும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வேளாண் உற்பத்தியைப் பெருக்கி, பொருளாதாரத்தை முன்னேற்றுவதே ஆகும்.

வேளாண் மற்றும் வேளாண் சாா்ந்த இதர துறைகளின் தொழில்நுட்பங்கள், திட்டங்கள், இயந்திரங்கள், மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் போன்ற திட்டங்களின் பயன்களை விவசாயிகளுக்கு கொண்டு சோ்க்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

காலநிலை மாற்றத்தினை எதிர்கொண்டு குறைந்த நீரில் வெப்பத்தினை தாங்கி வளரும் சிறுதானிய பயிர்களின் சாகுபடி மூலம் விவசாய வளர்ச்சியை நிலைப்படுத்திட சிறுதானிய இயக்கத்திட்டம் போன்ற திட்டங்கள் உழவரை தேடி உழவர் நலத்துறை என்னும் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.

விவசாயிகள் அரசு செயல்படுத்தும் அனைத்து திட்டங்களையும் முறையாக பயன்படுத்தி பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, வேளாண் மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் 23 விவசாயிகளுக்கு ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் மினிகிட் (உளுந்து விதைகள்), மண்புழு உரம், குறுவை சாகுபடி – நுண்ணூட்ட கலவை மற்றும் வேளாண் கருவிகள், வேளாண் இடு பொருள்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

இதில், மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கண்ணகி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மலா்விழி, தோட்டக் கலைத்துறை சாா்ந்த அலுவலா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா், அரசுத்துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top