விழுப்புரத்தில் மாம்பழபட்டு சாலையில் வெட்டிய பள்ளத்தால் பெரும் விபத்து ஏற்படும் முன்பு சரிசெய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை வலுத்து வருகிறது.
விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூருக்கு செல்லும் சாலை மாம்பழப்பட்டு சாலை என அழைக்கப்படுகிறது. அந்த சாலையில் விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு அருகே மின்சார துணை மின் நிலையம் ஒன்று உள்ளது.
அதற்கு எதிரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதாள சாக்கடை மூடியிலிருந்து கழிவு நீர் வெளியேறியதாக தெரிகிறது. அதனை சரிசெய்ய அங்கு சாலையின் நடுவே பள்ளம் தோண்டி, கால்வாய் மாதிரி வழி செய்தனர். அதனால் தற்காலிகமாக அது சரி செய்யப்பட்டது,
அதனைத் தொடர்ந்து அந்த இடம் மண் போட்டு மூடப்பட்டதால் கடந்த சில நாட்களாக திடீர் திடீரென பெய்து வரும் கனமழையின் காரணமாக ஒன்றரை அடிக்கு மேல் மண் உள்வாங்கி கால்வாய் மாதிரி மாறி உள்ளது.
அந்த சாலை வழியே தினம் தோறும் 24 மணி நேரமும் இருசக்கர வாகனம், கார், பேருந்து, லாரிகள் உட்பட நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் விழுப்புரத்தில் இருந்து கிராமப்புற பகுதிகளுக்கு நகரத்திற்கு வேலை தேடி வந்து செல்பவர் தினம் தோறும் நூற்றுக்கணக்கானோர் இருசக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனர்.
மேலும் அப்பகுதி ஒட்டி உள்ள பகுதிகளில் உள்ள மக்கள் நகரத்தில் உள்ள கடைகளுக்கு, பேருந்து நிலையத்திற்கும் நூற்றுக்கணக்கானோர் அந்த சாலையை பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள அரசு பொது மருத்துவமனை மற்றும் பள்ளிகளுக்கு தினம் தோறும் வழியாக நூற்றுக்கணக்கானோர் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் அந்த சாலையில் இந்த கால்வாய் போன்ற பள்ளத்தால் அவ்வப்போது சிறு சிறு விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன, மேலும் திடீர் திடீரென பெய்யும் மழையினால் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்,
மேலும் பள்ளி கல்லூரிகள் திறக்க உள்ள நிலையில் பெரும் விபத்து ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறையோ அல்லது நகராட்சியோ உடனடியாக அந்த கால்வாய் போன்ற பள்ளத்தின் மீது மீண்டும் மண்ணைப் போட்டு மூடாமல், நிரந்தரமாக தார் போட்டு மீண்டும் பழைய சாலை மாதிரி அமைக்க வேண்டும் என அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை வலுத்து வருகிறது.
விழுப்புரத்திலிருந்து பா.பொன்னுசாமி