விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் தகவல்கள் அடங்கிய தன் புகைப்பட அமைப்பினை 31- ந்தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துவக்கி வைத்து, புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அப்போது அவர் தெரிவிக்கையில் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழித்திடும் விதமாக ட்ரக் ஃப்ரி தமிழ்நாடு எனும் திட்டத்தினை செயல்படுத்தினார்கள். இதன் மூலம், தமிழ்நாட்டில் போதைப்பொருட்களை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்.
அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், போதைப் பொருட்கள் தடுப்பு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் தகவல்கள் அடங்கிய தன் புகைப்பட அமைப்பு துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
தன் புகைப்பட அமைப்பில், விழுப்புரம் மாவட்டத்தில் மது மற்றும் போதைப்பொருட்கள் தொடர்பான புகார் அளிப்பதற்காக 10581 என்ற எண்ணும் மற்றும் 9498110581 என்ற கைப்பேசி எண் மற்றும் QR Code இடம்பெற்றுள்ளதால், பொதுமக்கள் இதன் மூலம் போதைப்பொருட்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்,
புகார் அளித்தவர்களின் விவரம் பாதுகாக்கப்படுவதுடன், புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையினை மீண்டும் QR Code ஸ்கேன் செய்து அறிந்துகொள்ளலாம். எனவே, பொதுமக்கள் விழுப்புரம் மாவட்டம் போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக உருவாவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கிஅரிதாஸ், உதவி ஆணையர் (கலால்) க.ராஜு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.