Close
ஜூன் 4, 2025 4:50 மணி

அண்ணாமலையார் கோயிலில் பிரேக் தரிசன முறை: பொது மக்களின் கருத்து கேட்பு

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் ,  நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் திருவண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலையாரை வழிபட்டு 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபாடு செய்கின்றனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்யும் பொருட்டு பிரேக் தரிசன முறை அமல்படுத்த ஆட்சேபனை இருந்தால் நேரிலோ கடிதம் மூலமாகவோ தெரிவிக்கலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சமீப காலமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு தமிழகம் மட்டும் இன்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் தரிசனத்திற்கு வருவதால் சாமி தரிசனம் செய்ய 2 மணி நேரம் முதல் 6  மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

முக்கிய பிரமுகர்கள் மற்றும் விஐபி போன்றவர்கள் தரிசனம் செய்ய முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இது மட்டும் இன்றி பக்தர்களிடையே மோதலும் நிகழ்ந்து வருகிறது.

ஒவ்வொரு மாதமும் 3 கோடிக்கு மேல் காணிக்கையாக பக்தர்களிடம் இருந்து பெறப்பட்டு வரும் நிலையில் கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு விரைவான தரிசன வசதியும் அடிப்படை வசதிகளை இது செய்யாமல் இருப்பது பக்தர்கள் இடையே மன வருத்தத்தை ஏற்படுத்தி வந்தது.

பிரேக் தரிசன முறை

இந்நிலையில் அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்கள் விரைவு தரிசனம் செய்வதற்காக தினமும் மாலை 3 மணி முதல் 4 மணி வரை 1 மணி நேரம் இடை நிறுத்த தரிசனம் செய்ய தற்போது கோவில் நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்து இதற்காக கட்டணம் ரூ 500 ஆக நிர்ணயம் செய்து முதற்கட்டமாக செய்தித்தாளில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மீது பொது மக்கள் தங்களது ஆலோசனைகளையும் மற்றும் ஆட்சேபனைகளையும் வருகிற 30.06.2025 ஆம் தேதிக்குள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் இணை ஆணையர் அவர்களுக்கு கடிதம் மூலமாகவும், jceotvm_20343. hrce@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் அனுப்பி வைக்குமாறு கோவில் இணை ஆணையர் ஜீவானந்தம் கேட்டுக் கொண்டுள்ளார்.

உள்ளூர் பக்தர்கள் கோரிக்கை

இதேபோல் உள்ளூர் பக்தர்கள் தினமும் ஒரு மணி நேரம் அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு தனி நேரம் ஒதுக்கி ஏற்பாடு செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

திருவண்ணாமலை நகரத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தினமும் அண்ணாமலையாரை , வழிபட்டு வந்தனர். தற்போது திருவண்ணாமலை நகர மக்களே அண்ணாமலையாரை தரிசிக்க முடியாமல் உள்ளனர்.

கோவிலுக்குள் சென்றே பல ஆண்டுகள் ஆகிவிட்டது என சொல்லும் அளவிற்கு தற்போது வெளி மாநிலத்தவரின் கூட்டம் மிக அதிகமாக உள்ளது.

எனவே திருவண்ணாமலை நகரை சேர்ந்த எங்களுக்கு தினமும் 1 மணி நேரமோ அல்லது 2 மணி நேரமோ ஒதுக்கித் தாருங்கள் என கோரிக்கை வைத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top