திருவண்ணாமலை மாவட்டத்தில், கோடை விடுமுறைக்கு பிறகு வரும் 2ம் தேதி பள்ளிகள் திறப்பதால், பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து, திட்டமிடப்பட்டபடி வரும் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு கோடை வெயில் தாக்கம் வெகுவாக குறைந்துவிட்டதால், விடுமுறை நீட்டிப்பதற்கான அவசியம் ஏற்படவில்லை.
இந்நிலையில், சுமார் ஒரு மாதத்துக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பதால், பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள், சத்துணவு சமையல் அறை போன்றவற்றை தூய்மைப்படுத்தி தயார் நிலையில் வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 2 நாட்களாக தூய்மைப்பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. மேலும், பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டிகளை முறையாக சுத்தம் செய்த பிறகே பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிகளில் தூய்மைப் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கலசபாக்கம் அரசுப் பள்ளியில் தூய்மை பணிகளை தொடங்கி வைத்த எம்எல்ஏ
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் பஜார் வீதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிகள் அனைத்தும் கோடை விடுமுறை முடிந்து துவங்க இருப்பதால் பள்ளிகளின் தரத்தை ஆய்வு செய்து அதன் பின்னர் தூய்மை பணிகளை சரவணன் எம்எல்ஏ தொடங்கி வைத்து பேசியதாவது;
பள்ளிக்கட்டடங்கள் அனைத்தும் தூய்மையாக பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல் பள்ளி கட்டடங்கள் ஏதாவது சேதம் இருந்தால் உடனடியாக எங்களிடம் தகவல் கூறி பள்ளிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அமைத்துக் கொள்ள வேண்டும், ஏனென்றால் மாணவர்கள் படிப்பும் மாணவர்களின் பாதுகாப்பும் மிக முக்கியமானது.
அதனால் மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பான முறையில் சிறப்பான கல்வியை கற்றுக் கொள்ள வேண்டும். மாணவர்கள் தான் நாளைய இந்தியாவின் எதிர்காலம். அதனால் மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்றுக் கொண்டு சாதிக்கவேண்டும். அதனால் பள்ளிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மற்றும் பள்ளிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் உடனுக்குடன் பெற்றுக் கொடுங்கள்.
பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் மாணவர்கள் சிறந்த முறையில் படித்து சாதிக்க வேண்டும் என்பதற்காக நாள்தோறும் திட்டங்களை வழங்கி வருகிறார்கள்.
அதைநாம் சரியான முறையில் பயன்படுத்தி கல்வியில் மாணவர்களை சிறந்த முறையில் சாதிக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு மாணவர்களுக்கு சிறப்பான கல்வியைகொடுக்கவேண்டும். அதேபோல் பள்ளிகளும் தூய்மையாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகர செயலாளர் சௌந்தர்ராஜன், தலைமை ஆசிரியர் தமிழரசி, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், மற்றும் இருபால் ஆசிரியர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.