Close
ஜூன் 4, 2025 3:25 மணி

அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களிடையே மோதல்: மண்டை உடைப்பு

கடும் வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்த பக்தர்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் வரிசையில் நின்ற போது வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டதில் ஒருவரின் மண்டை உடைந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், தமிழ்நாட்டில்  மட்டுமல்லாமல் உலக அளவில் முக்கிய ஆன்மீக கோவில்களில் ஒன்றாகும்.

அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.

பொது தரிசன வரிசையில் வந்த பக்தா்கள் ராஜகோபுரம் வழியாகவும், கட்டண தரிசன வரிசையில் வந்த பக்தா்கள் அம்மணி அம்மன் கோபுரம் வழியாகவும் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். காலை 8 மணிக்குப் பிறகு கோயிலுக்கு வரும் பக்தா்கள் கூட்டம் அதிகரித்தது. நேற்று வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்த நிலையிலும், அதையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.

பொது தரிசன வரிசையில் வந்த பக்தா்கள் சுமாா் 6 மணி நேரமும், கட்டண தரிசன வரிசையில் வந்த பக்தா்கள் சுமாா் 4 மணி நேரமும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

கைகலப்பு

இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் வரிசையில் நின்ற போது வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர், ஆந்திரா – கர்நாடகாவை சேர்ந்த பக்தர்கள் இடையே மோதல் ஏற்பட்டதில் ஒருவரின் மண்டை உடைந்தது.  இந்த மோதல் சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் உருவானது. இதில், காயமடைந்த 2 போ் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயில் நிர்வாகம் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல முறையாக வழிவகை செய்யவில்லை என பக்தர்கள் குற்றம் சாட்டினர். மேலும் பக்தர்கள் கூறுகையில், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கோவில் ஊழியர்களுக்கு சுவாமி தரிசனத்திற்கு வரும் விஐபிகளை அழைத்துச் செல்வதற்கு தான் நேரம் அதிகமாக உள்ளது, சாதாரண பக்தர்களை வரிசையில் அனுப்ப எந்தவிதமான ஏற்பாடும் செய்வதில்லை என வேதனையுடன் தெரிவித்தனர்.

பணம் பெற்றுக் கொண்டு குறுக்கு வழியில் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தினர்.

போக்குவரத்து நெரிசல்

கோயிலுக்கு வந்த பக்தர்கள் கூட்டத்தால் நகரின் பல இடங்களிலும் மாட வீதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக காணப்பட்டதால் அப்பகுதியில் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் மிகவும் வேதனை அடைந்தனர்.

ஆட்டோக்கள் வேகமாக வருவதும் பக்தர்களை வழியிலேயே இறக்கிவிட்டு அவர்களிடத்தில் தகராறு செய்வதும் கூடுதல் பணம் கேட்டு தகராறு செய்வதும் என ஆட்டோ டிரைவர்கள் ஈடுபடுகிறார்கள். இதனை காவல்துறையினர் கண்காணித்து முறைப்படுத்த வேண்டும் என பக்தர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top