Close
ஜூன் 5, 2025 3:04 மணி

அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களின் குழந்தைகளுக்கு நாள் முழுவதும் பால் வழங்கும் புதிய திட்டம்

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோவிலில் பக்தர்களின் குழந்தைகளுக்கு நாள் முழுவதும் பால் வழங்கும் புதிய திட்டத்தை தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார்.

தமிழக அரசு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் அரசு அலுவலகங்களுக்கு பச்சிளம் குழந்தைகளோடு வரும் தாய்மார்களுக்கு பாலூட்டும் அறை மற்றும் குறை தீர்வு கூட்டம் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வரும் பச்சிளம் குழந்தைகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காய்ச்சிய பால் கொடுக்கப்பட்டு வருகிறது

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்து அறநிலையத்துறை சார்பில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது மேலும் வெயில் காலங்களில் குடிநீர் மோர் உள்ளிட்டவைகளும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்  2025–2026-ம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின் போது, ‘சுவாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு 10 திருக்கோயில்களில் தினசரி காய்ச்சிய பால் வழங்கப்படும்’ என அறிவிக்கப்பட்டது.

தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி பச்சிளம் குழந்தைகளோடு வரும் தாய்மார்களுக்கு பால் வழங்கும் திட்டத்தை துணை சபாநாயகர் தொடங்கி வைத்தார். அண்ணாமலையார் கோவிலில் நான்காம் பிரகாரத்தில் கலையரங்கம் முன்பாக கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தாய்மார்களோடு வந்த பச்சிளம் குழந்தைகளுக்கு பால் வழங்கி இத்திட்டத்தினை துவக்கி வைத்தார்.

மேலும் குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய தனி வரிசையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் இணை ஆணையர், ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் டி.வி.எஸ்.ராஜாராம், உறுப்பினர் கோமதி குணசேகரன், மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் திருக்கோவில் அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தாய்மார்கள் மகிழ்ச்சி

சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் சுமார் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக குழந்தைகளுடன் காத்திருக்கும் தாய்மார்கள் பால் வாங்குவதற்கு வெளியே செல்வதற்கு கூட முடியாத நிலையில் தற்போது அரசே இத்திட்டத்தை அறிவித்திருப்பது தாய்மார்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தாய்மார்கள் மற்றும் பொதுமக்கள் இத்திட்டத்தை வரவேற்றும் மேலும் குழந்தைகளுடன் வரும் தாய்மார்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தித் தந்த கோயில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் கோயில் நிர்வாகத்தினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top