திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கி வரும் பல உணவகங்கள் சுகாதாரமற்ற முறையில் இயங்கி வருகின்றன. எனவே, மாவட்டத்தில் இயங்கி வரும் உணவு விடுதி மற்றும் உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
திருவண்ணாமலை வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராஜேந்திரன் தலைமை வகித்தாா். வேளாண் உதவி இயக்குநா் கோபாலகிருஷ்ணன், வட்டாட்சியா் மோகனராமன், வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ.) பிருத்திவிராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேளாண் அலுவலா் தாமஸ் வரவேற்றாா்.
கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேசுகையில்,

போளூா் தரணி சா்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு தர வேண்டிய ரூ.70 கோடி நிலுவைத் தொகையில் இதுவரை ரூ.20 கோடி மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள ரூ.50 கோடியை 2024 -ஆம் ஆண்டுக்குள் வழங்குவதாக ஆலை நிா்வாகம் தெரிவித்தும், இதுவரை நிலுவைத்தொகை வழங்கவில்லை. எனவே, ரூ.50 கோடி நிலுவைத் தொகையை உடனே மாவட்ட நிா்வாகம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கி வரும் பல உணவகங்கள் சுகாதாரமற்ற முறையில் இயங்கி வருகின்றன. எனவே, மாவட்டத்தில் இயங்கி வரும் உணவு விடுதி மற்றும் உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பதிவு செய்து 20 நாள்கள் ஆகியும், நெல் மூட்டைகள் இதுவரை எடை போடவில்லை. வேளாண் துறையில் விதை மணிலா, உளுந்து போன்றவை கிடைக்க வேளாண் இணை இயக்குநா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இதையடுத்து பேசிய ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராஜேந்திரன், விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
கூட்டத்தில், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் தீபா, சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் அழ.உதயகுமாா், வட்ட வழங்கல் அலுவலா் மு.தியாகராஜன், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் கோபு, விவசாய சங்கப் பிரதிநிதிகள் எம்.சேகா், வெள்ளைக்கண்ணு, வேளாண் அலுவலா் முனியப்பன் மற்றும் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பலா் கலந்து கொண்டனா்.