திருவண்ணாமலை கிரிவல பாதையில் சட்டவிரோத கட்டிடங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை பற்றி ஜூன் 20க்குள் திருவண்ணாமலை ஆட்சியருக்கு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலையில் கடந்த ஆண்டு பெஞ்சல் புயலால் பெய்த கனமழையால் அண்ணாமலையார் தீபமலையின் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. குறிப்பாக, மலைப்பகுதியில் உள்ள வஉசி நகரில் 7 பேர் உயிரிழந்தனர். பல வீடுகள் சேதமடைந்தன.
தொடர்ந்து மண் சரிவு ஏற்படும் ஆபத்து இருப்பதாக புவியியல் வல்லுநர் குழு தமது ஆய்வு அறிக்கையில் எச்சரித்துள்ளது. மேலும், இந்த மலைப்பகுதி வசிப்பதற்கு உகந்த இடம் இல்லை எனவும், அடுத்தடுத்து கனமழை பெய்தால் மேலும் மண் சரிவும், பாறைகள் உருண்டு விழும் ஆபத்து இருப்பதாகவும் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையின் மீது நீர் வழி பாதைகளை ஆக்கிரமித்து சட்ட விரோதமாக பட்டா இல்லாமல் பலர் வீடுகள் கட்டியுள்ளனர் என்றும் அதனை அகற்ற வேண்டும் என்றும், மேலும் பல்வேறு தீர்த்த குளங்கள் அழிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டு குடியிருப்பு பகுதிகளாக மாறி உள்ளது என்று யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கில் திருவண்ணாமலை மலையே சிவன் தான்! அங்கு எப்படி கழிப்பிடங்களும் கட்டிடங்களும் கட்ட அனுமதிக்கலாம் என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது.
தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவின் படி தொடர்ந்து மலை மீது உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து இந்த குழு ஆட்சியர் அலுவலகத்தில் நான்கு முறை கூடி ஆலோசனை நடத்தியது.
மலையில் மண் சரிவு ஏற்பட்டு ஏழு பேர் உயிரிழந்த இடத்தையும் ஆய்வு செய்த நீதிபதி நீதிமன்றத்திற்கு உயிர்கள் முக்கியம் வீடுகளுக்காக உயிர்களை பலி கொடுக்க முடியாது என கருது தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர் ஶ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்த போது, எந்த அனுமதியும் பெறாமல் 1,535 கட்டுமானங்கள் கட்டப்பட்டு உள்ளதாகவும், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குழு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கையை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள 1,535 சட்ட விரோத கட்டுமானங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 20ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதேபோல, திருவண்ணாமலையில் உள்ள நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்திருந்த வழக்கும், தலைமை நீதிபதி ஶ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. நில நிர்வாக ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அறிக்கையில், நீர் நிலைகள் என மனுதாரர் குறிப்பிட்டுள்ள 170 இடங்களில் 84 மட்டுமே நீர் நிலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, வகைப்படுத்தப்பட்டுள்ள 84 நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளதா? என கண்டறியவும், ஆக்கிரமிப்புகள் இருந்தால் அவற்றை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.