திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதியில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
திருவண்ணாமலை மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு 27 விடுதிகள், கல்லூரி மாணவர்களுக்கு 5 விடுதிகள், பள்ளி மாணவிகளுக்கு 13 விடுதிகள், கல்லூரி மாணவிகளுக்கு 4 விடுதிகள் உள்பட மொத்தம் 49 விடுதிகள் இயங்குகின்றனர். பள்ளி விடுதிகளில் 4 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவியகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் படிக்கம் மாணவ – மாணவிகளும் சேர்க்கப்படுகின்றனர்.
விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு, உணவு மற்றும் தங்கும் வசதி, 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு 4 இணை சீருடைகள் தைத்து வழங்கப்படும். 10 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு நீட் ஜேஇஇ நுழைவுத்தேர்வுக்கான வினா வங்கி நூல்கள், சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். மேலும், மாணவ-மாணவிகளுக்கு ஜமுக்காளம், பாய்கள், போர்வைகள், மலைப்பகுதியில் உள்ள விடுதிகளில் கம்பளி மேலாடை போன்றவை வழங்கப்படும். இந்த விடுதிகளில் சேர பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
மாணவர்களுக்கு அவர்களின் வீட்டில் இருந்து கல்வி நிலையம் 8 கிமீ தூரத்துக்கு மேல் இருக்க வேண்டும். மாணவிகளுக்கு இந்த கட்டுப்பாடு இல்லை. தகுதியும், ஆர்வமும் உள்ள மாணவ – மாணவிகள், சேர்க்கைக்கான விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்ோர் நல அலுவலகத்தில் அல்லது சம்மந்தப்பட்ட விடுதிகளில் பெற்று, வரும் 18ம் தேதிக்குள் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.
மேலும், ஒவ்வொரு விடுதியிலும், முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழரின் குழந்தைகளுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.